ஒருமுறை ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி மூவருக்கிடையே யார் சிறந்தவர் என்ற சர்ச்சை எழுந்தது. இதனால் மூவரும் பூலோகம் புறப்பட்டனர். இதில், ஸ்ரீதேவி முதலில் வந்து தங்கிய இடம் என்பதால் இது திருத்தங்கல் என்றானது. பிறகு, மற்ற தேவியரும் வந்து பெருமாளை சரண் அடைந்து இணைந்த இடம் இது.
இதனால் இங்கு வந்து வழிபட, பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வர், அவர்கள் பிணக்குகள் மாறி ஒற்றுமை கூடும் என்கிறார்கள். மேலும் இங்குதான் பெருமாள் ஜாம்பவதியை மணந்துகொண்டார் என்கிறது தலவரலாறு. திருமகளே செங்கமலத் தாயாராக இங்கு அவதரித்து பெருமாளை மணந்தார் என்றும் கூறுகின்றது.
மூலவர் சுதைத் திருமேனி என்பதால் இங்கே அவருக்குத் திருமஞ்சனம் கிடையாது. செங்கமலவல்லித் தாயாருக்கு மட்டும் தினந்தோறும் எண்ணெய்க் காப்பு திருமஞ்சனம் நடைபெறும். குடைவரைக் கோவிலாக அமைந்துள்ள இந்த அற்புதத் திவ்யதேசத்தில் ரங்கநாதர், கருடாழ்வார், ஆஞ்சநேயர், ராமாநுஜர், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், நாகமுனிவர் சந்நிதிகளும் உள்ளன.

செங்கமலத் தாயார் வேறெங்கும் காண முடியாத அளவுக்கு நின்ற திருக்கோலத்தில் தனிச் சந்நிதியில் ஆறடி உயரத்தில் எழுந்தருளி இருக்கிறார். வந்தவருக்கு எல்லாம் மங்கல வாழ்வு அருளி வாழ்வித்துவருகிறார். பிரம்மாண்ட புராணத்தின் ஷேத்திர காண்டத்தில் எட்டு அத்தியாயங்களில் இந்தத் தலத்தின் விசேஷம் கூறப்பட்டுள்ளது.
புரூரவ மன்னன் இங்கே பெருமாளை சேவித்து வரம் பெற்றார். மன்னனது வேண்டுதலால்தான் துவாரகையில் நடக்க வேண்டிய அநிருத்தன்-உஷை திருமணம் இங்கு நடந்ததாம். கருடாழ்வார் இங்கு விசேஷமாக நான்கு திருக்கரங்களுடன் உள்ளார்.
முன் கைகள் வணங்கியும், பின் கைகளில் அமிர்த கலசமும், நாகமும் உள்ளன. இதனால் சர்ப்ப தோஷங்களுக்கும் ராகுகேது தோஷங்களுக்கும் பரிகாரம் செய்ய சிறந்த கோயிலிது என்கிறார்கள்.
பாஸ்கர, பாபநாச தீர்த்தங்களும், அர்ச்சுனா நதியும் தல தீர்த்தமாக உள்ளன. விசேஷமான தேவச்சந்திர விமானம் அமைந்துள்ளது.