முருகப்பெருமான் அருள்பாலிக்கும் மலைத்தலங்கள் எப்போதும் சிறப்பு வாய்ந்தவை. ஒருமுறை சென்று தரிசனம் செய்தாலே வாழ்வில் ஏற்றமும் மாற்றமும் நிச்சயம் கிடைக்கும். அப்படி ஒரு தலம்தான் மயிலம்.
விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டில் இருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ளது இந்த அழகிய மலைக்கோயில் தலம். “மயிலம் பொம்மபுரி ஆதீனம், ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் திருமடம்’ மூலமாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

சூரபத்மன், முருகனுக்கு எதிராகப் பல தந்திரங்களைப் பயன்படுத்தியும் போரில் தோற்றான். தோல்வியுற்ற சூரபத்மன், தன் தவற்றினை உணர்ந்து முருகப்பெருமானை மனம் உருகவேண்டிக் கொண்டான்.
எப்போதும் முருகனின் திருவடிகளிலேயே இருந்து அவரைச் சுமக்கும் வரம் வேண்டும் என்று வேண்டினான். மயிலாக சூரனை மாற்றினார் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் அந்தப் பதவி அவனுக்கு உடனே கிடைத்துவிடவில்லை. ஆதியில் முருகப்பெருமானுக்கு ஒரு மயில் வாகனம் உண்டு. அது இந்திரமயில்.
அதைவிடுத்து சூரனை வாகனமாக ஏற்கவேண்டும் என்றால் அவன் பக்குவப்பட வேண்டும். அந்தப் பக்குவத்தை தவமே அளிக்கும் என்பதால் முருகக் கடவுள், “நீ மயில் வடிவத்தை எடுக்க உறுதியுடன் தவத்தை மேற்கொள்வாயாக” எனக் கூறி மறைந்தாராம்.
அதன்படி, இங்கு சூரபத்மனும் தவம்புரிந்து மயிலாக முருகனின் வாகனமாகும் வரம் பெறுகிறான். அவ்வாறு அவன் தவம் புரிந்த இடம் மயூராசலம். சூரனின் தவத்துக்கு மகிழ்ந்து காட்சி கொடுத்த முருகனிடம், “இறைவா நான் மயில் வடிவமாக இருந்து தவம் புரிந்த இந்த மலையில் தாங்களும், எந்நாளும் வீற்றிருந்து அன்பர்களுக்கு அருள்புரிய வேண்டும்” எனும் கோரிக்கைகளை வைத்தான் சூரபத்மன்.