தமிழ்நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயிகளின் உணர்வுகளையும் கோரிக்கைகளையும் இந்த அரசு முழுமையாக மதிக்கிறது. அரசு பேச்சுவார்த்தைக்கு எப்போதும் தயாராகவே இருக்கிறது. எதையும் செய்ய முடியாது என்று மறுக்கவில்லை. எனவே, அதிகாரிகளின் ஆய்வுப் பணிகள் மற்றும் முதலமைச்சரின் முடிவுக்குத் தேவையான இந்த 20 நாள்கள் அவகாசத்தைக் கொடுத்து, போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு விவசாயிகள் பெருமக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டார். இதற்கிடையே அமைச்சர் பேசிக்கொண்டிருக்கும்போதே சலசலப்பு ஏற்பட்ட நிலையில், இடையிலேயே அமைச்சர் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

அமைச்சர் சென்றபிறகு செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, “சென்னை பேச்சுவார்த்தையில் கூட்டுறவு விவசாயக் கடன் தள்ளுபடிக்கு ரூ. 3,000 கோடி அல்ல, மொத்தம் ரூ. 9,000 கோடி தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அது குறித்து நிதியமைச்சகம் மற்றும் செயலாளர்களுடன் பேசி ஒரு வாரத்திற்குள் ஆலோசிப்பதாக அமைச்சர்கள் கூறியிருந்தனர். ஆனால், கூட்டத்தில் தள்ளுபடித் தொகை எவ்வளவு, சிறு-குறு விவசாயிகள் மற்றும் பெரிய விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி அளவு என்ன என்பது போன்ற விவரங்களை அமைச்சர்கள் தெளிவாக அறிவிக்கவில்லை.
அதனால் அதிருப்தியடைந்த விவசாயிகள் கூச்சலிடவே அமைச்சர்கள் கோபித்துக் கொண்டு சென்றுவிட்டனர். எனவே, அரசின் இந்த 20 நாள் கால அவகாசக் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதா அல்லது போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவதா என்பது குறித்து விவசாயிகள் தற்போது ஒன்றுகூடி ஆலோசித்து முடிவு செய்யவுள்ளனர்” என்றார்.