Business
oi-Vigneshkumar
டெல்லி: இந்தியா – பிரிட்டன் இடையேயான விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் இன்று புதன்கிழமை அமலுக்கு வந்துள்ளது. இந்த ஒப்பந்தம் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பிரிட்டனில் மிக பெரிய வாய்ப்புகளை உருவாக்குகிறது. மேலும், இதன் மூலம் பல பிரிட்டிஷ் பொருட்களின் விலையும் குறைய போகிறதாம். இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அதிபர் டிரம்ப் உலக நாடுகள் மீது வரி குறித்து மிரட்டலைத் தொடர்ந்தே வருகிறார். இதனால் உலக நாடுகள் மாற்றுச் சந்தையை நோக்கி கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை இப்போது அமெரிக்காவுக்குப் பதிலாக ஐரோப்பா, அதிலும் குறிப்பாக பிரிட்டனில் வர்த்தகத்தை அதிகரிக்கக் கவனம் செலுத்தி வருகிறது. இதற்காகச் சமீபத்தில் பிரிட்டன் உடன் ஒப்பந்தமும் போட்டது.

இந்தியா பிரிட்டன்
அந்த ஒப்பந்தம் இன்று புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது. அதன்படி இந்த ஒப்பந்தத்தின் கீழ் பல பொருட்களின் விலை கணிசமாக குறைய வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக ஸ்காட்ச் விஸ்கி, ஜின், பிரிட்டிஷ் சொகுசு கார்கள், மோட்டார் சைக்கிள்கள், சாக்லேட்கள், பிஸ்கட்கள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் சில உணவுப் பொருட்களின் விலை சீக்கிரமே குறையக்கூடும்.
விலை குறையும்
ஏனென்றால் இப்போது இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பல பிரிட்டிஷ் பொருட்களுக்கு அதிக சுங்க வரி விதிக்கப்படுகிறது. புதிய ஒப்பந்தத்தின் கீழ் இந்த வரிகள் படிப்படியாக குறைக்கப்பட உள்ளன. இதன் காரணமாக ஸ்காட்ச் விஸ்கி, ஜின், தொடங்கி சாக்லேட்கள், பிஸ்கட்கள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பல பொருட்களின் விலை குறையும்.
குறிப்பாக, இப்போது பிரிட்டிஷ் சொகுசு கார்களுக்கு 100 சதவீதத்திற்கும் அதிகமான இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. அதாவது அந்த சொகுசு காரின் அசல் விலை ரூ.2 கோடி என்றால் வரி மட்டும் ரூ.2 கோடிக்கு மேல் வரும். எனவே, அது ரூ.4 கோடிக்கு விற்கப்படும். ஆனால், இனி இந்த வரி குறையும் என்பதால் விலையும் கணிசமாக குறையும். அதேபோல ஸ்காட்ச் விஸ்கி மீதான சுங்க வரியும் குறைக்கப்பட உள்ளதால், அதன் விலையிலும் மாற்றம் ஏற்படும்.
யாருக்கு ஜாக்பாட்
அதேநேரம் இன்று ஒப்பந்தம் அமலுக்கு வந்துவிட்ட நிலையில், விலை உடனே குறையும் என சொல்ல முடியாது. பல பொருட்களுக்கு வரி குறைப்பு என்பது பல ஆண்டுகள் பல்வேறு கட்டங்களாக அமல்படுத்தப்படும். இதுபோல பல பொருட்கள் விலை குறைவது நல்ல செய்தி என்றாலும் அதை விட இந்தியாவுக்கு மற்றொரு முக்கிய பிளஸ் பாயிண்டு இருக்கிறது. அந்த பலன் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கே கிடைக்க உள்ளது.
அதாவது நாம் இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களில் சுமார் 99 சதவீதத்திற்கு இனி சுங்க வரியே இல்லை. அதாவது இந்திய பொருட்களை அனுப்பும்போது வரி விதிக்கப்படாது. எனவே, பிரிட்டனில் அதன் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு அதிகம். ஜவுளி மற்றும் ஆடைகள், தோல் மற்றும் காலணி உற்பத்தி, நகை மற்றும் வைரத் துறை, கடலுணவு, வாகன உதிரி பாகங்கள், மருந்து துறை, கெமிக்கல், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், விவசாய துறையினர் இதன் மூலம் லாபமடைவார்கள். இந்தத் துறைகளில் உற்பத்தி அதிகரிப்பதுடன், வேலைவாய்ப்புகளும் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாப்ட்வேர் துறை
பொருட்கள் மட்டுமின்றி சாப்ட்வேர் துறைக்கும் இந்த ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்திய ஐடி நிறுவனங்கள், பொறியாளர்கள், மருத்துவ நிபுணர்கள், கணக்காளர்கள் மற்றும் கல்விச் சேவை வழங்குவோருக்கும் பிரிட்டனில் கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும். மேலும், பிரிட்டனில் தற்காலிகமாக வேலை செய்யும் இந்தியர்கள் சமூகப் பாதுகாப்பு கட்டணத்தை செலுத்த வேண்டிய அவசியம் இல்லாததால் அந்த செலவுகள் குறையும்.
இந்த ஒப்பந்தம் என்பது பிரிட்டிஷ் சாக்லேட் அல்லது விஸ்கி மலிவாக கிடைப்பதை விட, இந்திய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வளர்ச்சிக்கே முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்தியா கடந்த சில காலமாகவே ஏற்றுமதியை அதிகரிக்க முடியாமல் வர்த்தக பற்றைக்குறையை எதிர்கொண்டு வருகிறது. இந்தச் சூழலில் உலகின் முக்கிய பொருளாதார சக்திகளில் ஒன்றான பிரிட்டன் உடன் அமலுக்கு வந்துள்ள இந்த ஒப்பந்தம் ஏற்றுமதியை அதிகரிக்க உதவும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை!
எனவே, ஒரு பக்கம் நமது நமக்களுக்கு பல பிரீமியம் பொருட்கள் குறைந்த விலைக்கு கிடைக்கும் நிலையில், இந்தியாவின் ஏற்றுமதியும் கூட பல மடங்கு அதிகரிக்கப் பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது.


