முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி-யின் 103-வது பிறந்தநாள் விழா கருத்தரங்கம் தேவர் ஹாலில் நடைபெற்றது. இதில், பேசிய முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி,
“வெற்றி தோல்விகளைக் கடந்து, நாளைய தலைமுறையின் எதிர்காலம் பாழாகிவிடக் கூடாது என்பதற்காகத் தன் ஆட்சிக் காலத்தில் தொலைநோக்குத் திட்டங்களை நிறைவேற்றியவர் நம் கழகத் தலைவர். மக்களின் குரலாய் ஒலிக்கும் தி.மு.க என்றும் மக்களோடு நின்றே தன் அரசியல் பயணத்தைத் தொடரும்.
லட்சியமும், கொள்கையும் கொண்ட இயக்கம் தி.மு.க. ஒரு குறிப்பிட்ட குறிக்கோள் நிறைவேறியதும் கட்சிகள் அமைதியாகி விடலாம். ஆனால், என்றும் லட்சியத்தோடும், கொள்கையோடும் செயல்படுவதால்தான் திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு “இயக்கம்’ என்று அழைக்கப்படுகிறது.

பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோர் ஊட்டிய கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற உணர்வோடு கழக உடன்பிறப்புகள் செயல்பட்டு வருகின்றனர். வெற்றி பெற்ற காலத்தை விட, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கும் காலத்தில் தான் கருப்பு-சிவப்பு வேட்டியைக் கட்டிக்கொண்டு கழக உடன்பிறப்புகள் இன்னும் வீரியத்துடன் களத்திற்கு வருவார்கள்.
மக்கள் வழங்கிய தீர்ப்பை தி.மு.க முழு மனதோடு ஏற்றுக் கொள்கிறது. தமிழக அரசியல் வரலாறு என்பது உழைப்பால் உயர்ந்த தலைவர்களைக் கொண்டது. ‘பச்சைத் தமிழர்’ காமராசரின் உழைப்பு, சிறு வயதிலேயே பத்திரிகை நடத்தி பெரியார்-அண்ணா கொள்கைகளை உள்வாங்கி வளர்ந்த கலைஞர் அவர்களின் உழைப்பு, வறுமையிலிருந்து போராடி முதலமைச்சரான எம்.ஜி.ஆர் அவர்களின் உழைப்பு ஆகியவற்றை இந்த நாடு அறியும். அதேபோல், மிசா சட்டத்தின்கீழ் சிறை சென்று, இளைஞரணி, சட்டமன்ற உறுப்பினர், சென்னை மேயர், அமைச்சர், துணை முதலமைச்சர் எனப் படிப்படியாக உழைத்து உயர்ந்தவர் நம் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்.
தன் தலைமையிலான ஆட்சியைக்கூட ‘திராவிட மாடல் ஆட்சி’ என்று கொள்கையோடு குறிப்பிட்டு, முதலமைச்சர் நாற்காலிக்குப் பெருமை சேர்த்தவர். ஆனால் இன்றைக்கு, சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட, இஸ்லாமிய மக்களைத் தவறாகச் சித்தரித்த, தன் திரைப்படம் வெளியாவதற்காக அப்போதைய முதலமைச்சரிடம் கைகட்டி நின்ற, இந்தி திணிப்பு எதிர்ப்பு உள்ளிட்ட எந்தவொரு மக்கள் போராட்டக் களத்திற்கும் வராத ஒரு இளைஞரின் கையில் அதிகாரம் சென்றுள்ளது.