ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்று வரலாறு படைத்திருக்கிறது பெங்களூரு அணி. ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை சென்னை மற்றும் மும்பை அணிகள் மட்டுமே தொடர்ந்து இரண்டு முறை கோப்பையை வென்றிருக்கின்றன. அந்த வரிசையில் இப்போது ஆர்.சி.பியும் இணைந்திருக்கிறது.

அஹமதாபாத் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் பெங்களூர் அணியின் கேப்டன் ரஜத் பட்டிதாரே டாஸை வென்றிருந்தார். அழுத்தமிக்க இறுதிப் போட்டி என்றாலும் சேஸிங்கை தேர்வு செய்து ரிஸ்க் எடுத்தார் ரஜத் பட்டிதார். அஹமதாபாத் மைதானம் பெரிய ஸ்கோர்களுக்கு பெயர் போன மைதானமாக மாறியிருக்கிறது.
இங்கே முதலில் பேட் செய்யும் அணி அதிரடியாக ஆடி ஒரு பெரிய டார்கெட்டை செட் செய்தால் சேஸ் செய்யும் அணிக்கு பெரும் சவாலாக மாறிவிடும். ஆர்.சி.பி ஆடிய கடந்த சீசனின் இறுதிப்போட்டியும் இதே மைதானத்தில்தான் நடந்திருந்தது. அப்போது ஆர்.சி.பி முதலில்தான் பேட்டிங் செய்திருந்தது. ஆனால், இந்த தர்க்கங்களையெல்லாம் உடைக்கும் அளவுக்கு ஆர்.சி.பி அணியின் பௌலர்கள் திறம்பட பந்துவீசினர். குஜராத் அணியில் பலமே அதன் ஓப்பனர்கள்தான்.

இருவருமே தலா 700+ ரன்களை இந்த சீசனில் அடித்திருக்கின்றனர். குஜராத்தை குறைவான ஸ்கோரில் சுருட்ட இவர்களின் விக்கெட்டை சீக்கிரம் வீழ்த்த வேண்டிய தேவை இருந்தது. அதை புவனேஷ்குமாரும் ஹேசல்வுட்டும் திறம்பட செய்தனர். தங்களின் முதல் ஸ்பெல்லிலேயே இருவரின் விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர். கில் 10 ரன்களிலும் சாய் சுதர்சன் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஓப்பனர்களின் விக்கெட் விழுந்தவுடனேயே குஜராத் முகாம் சோர்வடைந்துவிட்டது. அவர்களுக்கான மொமண்டமே கிடைக்கவில்லை.
பவர்ப்ளேயில் சீனியர்களான புவனேஷ்வர் குமாரும் ஹேசல்வுட்டும் கலக்க மிடில் ஓவர்களில் ராசிக் தர்ரும் க்ரூணால் பாண்ட்யாவும் கோலோச்சினர். அணியை சரிவிலிருந்து மீட்பார் என எதிர்பார்க்கப்பட்ட பட்லர் 100 ஸ்ட்ரைக் ரேட்டில் கூட ஆடாமல் க்ரூணால் பாண்ட்யாவின் பந்தில் ஸ்டம்பிங் ஆகினார். ஒரு முனையில் விக்கெட் விழுந்து கொண்டே இருந்தாலும் வாஷிங்டன் சுந்தர் இன்னொரு முனையில் நின்று ஆடி அரைசதத்தை கடந்தார். அவரின் ஆட்டத்தால்தான் குஜராத் அணி 20 ஓவர்களில் 155 ரன்களையே எட்டியது.

பெங்களூரு அணிக்கு 156 ரன்கள் இலக்கு. எளிய இலக்குதான் என்றாலும் இறுதிப்போட்டிக்கு ஏற்ற எதிர்பார்ப்பும் அழுத்தமும் இருந்தது. குஜராத்துக்கு எந்த வாய்ப்பையும் கொடுத்து விடக்கூடாது என்பதற்காக பெங்களூரு பேட்டர்கள் சேஸிங்கை வேகவேகமாக முன்னெடுத்தனர். பவர்ப்ளே வரைக்கும் இந்த அணுகுமுறை நல்ல பலனை கொடுத்தது. பவர்ப்ளே முடிவில் பெங்களூரு அணி 2 விக்கெட்டுகளை இழந்திருந்தாலும் 70 ரன்களை எடுத்திருந்தது. வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக 32 ரன்களை எடுத்து சிராஜின் பந்தில் அவுட் ஆகியிருந்தார். படிக்கல் 1 ரன்னில் ரபாடாவின் பந்தில் அவுட் ஆகியிருந்தார். விராட் கோலியும் 200+ ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடிக்கொண்டிருந்தார்.நம்பர் 4 இல் கேப்டன் ரஜத் பட்டிதார் இறங்கினார். அவரும் அதிரடியாகவே ஆட நினைத்தார். ஆனால், ரஷீத் கானின் முதல் ஓவரிலேயே பெரிய ஷாட்டுக்கு முயன்று 15 ரன்களில் அவுட் ஆகினார். ரஷீத்தின் அதே ஓவரில் க்ரூணால் பாண்ட்யாவும் lbw ஆகினார். பெங்களூரு அணி 91-4 என்ற நிலையில் இருந்தது. போட்டியில் கொஞ்சம் பதட்டம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்தது.
விராட் கோலியும் டிம் டேவிட்டும் கூட்டணி சேர்ந்தனர். அடுத்தடுத்து விக்கெட் கிடைத்த உற்சாகத்தில் ரஷீத் கான் ஸ்லிப் வைத்து அட்டாக் செய்தார். ஆனாலும் கோலியும் டிம் டேவிட்டும் ரிஸ்க் எடுத்து ஓவருக்கு ஒரு பவுண்டரியை அடித்து பிரஷர் ஏறாமல் பார்த்துக் கொண்டனர். ஒரு இரண்டு ஓவருக்குள் பெங்களூரு அணி மீண்டும் சேஸிங்கில் வேகம் பிடித்தது. கோலி அரைசதத்தை கடந்தார். டிம் டேவிட் டார்கெட்டுக்கு நெருக்கமாக ஸ்கோரை கொண்டு வந்துவிட்டு அர்ஷத்தின் பந்தில் எட்ஜ் ஆகி வெளியேறினார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் இன்னொரு பக்கம் மீட்பராக நின்ற விராட் கோலி ஆர்.சி.பியை இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை நோக்கி நகர்த்தி சென்றார்.

கடந்த முறை நாங்கள் வென்றது அதிர்ஷ்டத்தால் அல்ல என்பதை நிரூபிக்க இந்த முறையும் கோப்பையை வெல்ல வேண்டுமென சீசனுக்கு முன்பாக விராட் கோலி பேசியிருந்தார். சொன்னதை இப்போது செய்தும் காட்டியிருக்கிறார். ஒரு சீனியர் வீரராக அணியின் அத்தனை வீரர்களுக்கும் உத்வேகம் அளிக்கும்படி ஆடி இப்போது கோப்பையையும் வென்று கொடுத்திருக்கிறார். வாழ்த்துகள் ஆர்.சி.பி!