வேலூர்: சிறுவன் இறப்பில் விலகிய மர்மம்; அடித்துக்கொன்ற கொடூர அத்தை; பகீர் கிளப்பும் `படுபாதக’ செயல்

Spread the love

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள மேல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவரது மனைவி ஆஷா. இவர்களின் 6 வயது மகன் முகிலன்.

கடந்த 5 ஆண்டுகளாக மனைவி மற்றும் மகனைப் பிரிந்து வாழ்ந்துவந்த ராஜேஷ்குமார், 2 மாதங்களுக்கு முன்புதான் அவர்களுடன் சேர்ந்து வாழத் தொடங்கினார். திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை செய்வதால், மனைவி, மகனை தன்னுடன் அழைத்துச் சென்று தங்க வைத்துக்கொண்டார் ராஜேஷ்குமார்.

இந்த நிலையில்தான், கடந்த மே மாதம் 5-ம் தேதி, ராஜேஷ்குமாரின் தாயார் விஜயா திருப்பூருக்குச் சென்று தனது பேரப்பிள்ளையை வற்புறுத்தி தன்னுடன் மேல்பட்டி கிராமத்திலுள்ள தனது வீட்டுக்கு அழைத்துவந்தார்.

பாட்டியுடன் வீட்டில் இருந்த சிறுவன் முகிலன் நேற்று முன்தினம் மாலை ரத்தக காயங்களுடன் மர்மமான முறையில் இறந்துகிடந்தான். `காம்பவுண்ட் சுவர் மீது ஏறி கீழே விழுந்ததில், இறந்துவிட்டான்’ எனக் கூறி, பாட்டி விஜயாவும், அத்தை ரேவதி (37) என்பவரும் எந்தவிதமான கவலையுமின்றி ஃப்ரீசர் பாக்ஸ் வரவழைத்து இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகளையும் செய்துகொண்டிருந்தனர்.

சிறுவன் முகிலன்
சிறுவன் முகிலன்

இதைக் கவனித்த அக்கம், பக்கத்தினர் மேல்பட்டி போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். போலீஸார் விரைந்து வந்து சிறுவன் உடலைப் பார்வையிட்டபோது, கண் பகுதியில் வீக்கம், உதடு, தாடை பகுதிகளில் ரத்தக் காயம், உடல் முழுவதும் சிராய்ப்பு கன்றிய காயங்கள் எனச் சித்ரவதைக்குள்ளாகியிருப்பதும், சிறுவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதும் உறுதியாகத் தெரிந்தது.

இதையடுத்து, சிறுவனின் உடலை மீட்ட போலீஸார் பிரதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, பாட்டி விஜயாவையும், அத்தை ரேவதியையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தனர்.

இதில், சிறுவனின் தந்தையான ராஜேஷ்குமாரின் உடன்பிறந்த அக்காள்தான் இந்த ரேவதி. கருத்து வேறுபாடு காரணமாக, கணவனைப் பிரிந்து தனது 14 வயது மகனுடன் தாய் வீட்டில் தங்கியுள்ளார் ரேவதி.

இந்த நிலையில், தனது தம்பி மகன் முகிலனை தனது தாய் அழைத்துவந்தது ரேவதிக்குப் பிடிக்கவில்லை. முகிலனின் குறும்புத்தனம், விளையாட்டு ரேவதிக்கு வெறுப்பை உண்டாக்கியிருக்கிறது.

இதனால், முகிலனுக்குச் சரியாகச் சாப்பாடு வழங்காமல் அடித்து, உதைத்து சித்ரவதை செய்துவந்திருக்கிறார். சம்பவத்தன்று, தனது மகனின் படிப்புக்காக வாங்கி வைத்திருந்த கலர் பெயிண்ட்டை முகிலன் விளையாட்டுத்தனமாக எடுத்தபோது தரையில் கொட்டிவிட்டதாகத் தெரிகிறது.

இதனால், ஆத்திரமடைந்த அத்தை ரேவதி தென்னைமட்டையால் முகிலனைச் சரமாரியாகத் தாக்கி காயப்படுத்தியிருக்கிறார். இதில், பலத்த காயமடைந்த சிறுவன் முகிலன் சுருண்டு விழுந்திருக்கிறான். உடனடியாக மருத்துவமனைக்குத் தூக்கிச்செல்லாமல் வீட்டுக்குள் இழுத்துபோட்டுவிட்டு, தனது தாய் விஜயாவை அழைத்துக்கொண்டு கொத்தூர் கிராமத்திலுள்ள கோயிலுக்குச் சென்றுவிட்டாராம் ரேவதி.

கைது செய்யப்பட்ட அத்தை ரேவதி
கைது செய்யப்பட்ட அத்தை ரேவதி

திரும்பி வந்து பார்த்தபோதும், சிறுவன் முகிலன் அசைவில்லாமல் கிடந்ததைப் பார்த்து, `காம்பவுண்ட் சுவரில் ஏறி விழுந்ததில் மூச்சு பேச்சு இல்லாமல் கிடக்கிறான்’ என்று நாடகமாடி, உறவினரை அழைத்து பரிசோதிக்கச் செய்திருக்கிறார்கள். `இறந்துவிட்டான்’ எனத் தெரியவந்ததும், இறுதிச் சடங்கையும் செய்து கொலையை மறைக்க முயன்றிருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல், தனது தாய்க்குச் சொந்தமாக ஒரு ஏக்கர் விவசாய நிலமும், வீடும் இருப்பதால், அந்தச் சொத்துகள் தனது தம்பியின் மகனான முகிலனுக்குத்தான் சேரும். தனது மகனுக்கு சொத்து கிடைக்காது என்ற கோபத்திலும், வெறுப்பிலும்தான் முகிலனைக் கொடுமைப்படுத்தி, இன்று அடித்துக் கொலை செய்யும் அளவுக்குத் துணிந்திருக்கிறார் அத்தை ரேவதி என்கின்றனர் போலீஸார்.

இதையடுத்து, ரேவதியைக் கைது செய்த போலீஸார், பாட்டி விஜயாவிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *