India
oi-Halley Karthik
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் காலை வழிபாட்டுக் கூட்டத்தின் போது ‘காயத்ரி மந்திரம்’ மற்றும் பிற பிரார்த்தனைகளை ஓதுவதை பாஜக தலைமையிலான மாநில அரசு கட்டாயமாக்கியுள்ளது.
பள்ளி போன்ற கல்வி நிலையங்கள் மதச்சார்பற்றவையாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்து கல்வியாளர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், தற்போது காயத்ரி மந்திரம் கட்டாயம் என்று பாஜக அரசு உத்தரவிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இது தொடர்பாக மாநில கல்வித்துறை வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதலின்படி, மாணவர்களிடையே தார்மீக விழுமியங்கள், ஒழுக்கம் மற்றும் கலாச்சார விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு மாநிலத்திலுள்ள அனைத்து அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் தொடங்குவதற்கு முன்னதாக நடைபெறும் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் காயத்ரி மந்திரம் மற்றும் பிற நிர்ணயிக்கப்பட்ட பிரார்த்தனைகளை மாணவர்கள் கட்டாயம் ஓத வேண்டும்.
மாணவர்களின் மன ஒருமைப்பாட்டை அதிகரிக்கவும், நேர்மறையான சிந்தனைகளை வளர்க்கவும், இந்திய கலாச்சாரத்தின் விழுமியங்களை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 2023ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 54 தொகுதிகளை கைப்பற்றி பெரிய வெற்றியை பெற்றிருந்தது. பாஜக ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால், இந்துத்தவா கொள்கைகள் தடையின் அமல்படுத்தப்படும் என்கிற விமர்சனத்தை தற்போது சத்தீஸ்கர் மாநில அரசு உறுதி செய்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
பள்ளிகள் என்று எடுத்துக்கொண்டால், இந்து மதத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது இஸ்லாம், கிறிஸ்தவம், பௌத்தம் மற்றும் மத நம்பிக்கை இல்லாதவர்களின் பிள்ளைகள் கூட கல்வி கற்க வருவார்கள். அவர்கள் அனைவருக்கும் பொதுவாக காயத்ரி மந்திரம் ஓத வேண்டும் என்று உத்தரவிடுவதன் மூலம், ஒற்றை மதத்தை மாணவர்களிடையே அரசு திணிக்கிறது என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்திருக்கின்றன.