வைரஸ்களை மொத்தமாக காலி செய்யுமாம் கோமியம்! ஐஐடி வெளியிட்ட ஆய்வு முடிவு.. கிளம்பிய விவாதம்! | IIT Gomutra Study: Gomutra Arka has the Antiviral Properties Sparks Intense Social Media Debate

Spread the love

India

oi-Vigneshkumar

டேராடூன்: பசுக்களின் சிறுநீரில் இருந்து தயாரிக்கப்படும் ‘கோமூத்ர ஆர்க்’ எனப்படும் வடிநீர், வைரஸ்களுக்கு எதிராகச் செயல்படும் திறன் கொண்டது என்று ஐஐடி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான ஆய்வு முடிவுகள் சர்வதேச ஆய்வு இதழிலும் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் மிகப் பெரிய ஒரு விவாதம் நடந்து வருகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

ஐஐடி ரூர்க்கி (IIT Roorkee) சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட ஒரு பதிவு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பசுவின் சிறுநீரில் இருந்து தயாரிக்கப்படும் ‘கோமூத்ர ஆர்க்’ எனப்படும் வடிநீர், வைரஸ்களுக்கு எதிராகச் செயல்படும் திறன் கொண்டது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பதிவே இப்போது இணையத்தில் மிகப் பெரிய ஒரு விவாதத்தைத் தொடங்கி வைத்துள்ளது.

IIT Gomutra Study IIT science

வைரஸை அழிக்கும்

ஐஐடி ரூர்க்கியின் உயிரியல் பேராசிரியர் ஷைலி தோமர் தலைமையிலான குழுவினர் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். அப்போது இந்த கோமூத் ஆர்க் என்ற வடிநீர் சிக்கன்குனியா வைரஸை அழிக்கும் ஆற்றல் கொண்டது என்பது தெரிய வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வடிநீரில் உள்ள சில குறிப்பிட்ட வேதிப்பொருட்கள் வைரஸின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துகின்றன. மேலும், இது வைரஸின் தாக்கத்தை 90 சதவீதத்திற்கும் மேலாகக் குறைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதிலிருந்து மேம்படுத்தப்பட்ட ஒரு இயற்கை கலவை வைரஸ் பாதிப்பை 99.85 சதவீதம் வரை குறைப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

நிரூபணம்

இந்த ஆய்வு முடிவுகள் ‘ஏசிஎஸ் அக்ரிகல்ச்சுரல் சயின்ஸ் & டெக்னாலஜி’ என்ற சர்வதேச அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பதிவை தொடர்ந்து சமூக வலைதளங்களில் இருவேறு தரப்பினர் விவாதித்து வருகிறார்கள். ஒரு தரப்பினர் இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளை நவீன அறிவியலின் துணையோடு ஆராய்வது வரவேற்கத்தக்கது என்று கூறுகின்றனர். நமது முன்னோர்களின் அறிவை வெறும் மூடநம்பிக்கை என்று ஒதுக்காமல், அதை அறிவியல் பூர்வமாக நிரூபிப்பது நாட்டுக்குப் பெருமை என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

கடும் எதிர்ப்பு

ஆனால், மற்றொரு தரப்பினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஐஐடி போன்ற உயர்மட்ட கல்வி நிறுவனங்கள் இதுபோன்ற ஆய்வுகளில் ஈடுபடுவது சர்வதேச அளவில் இந்தியாவின் அறிவியல் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் என்று அவர்கள் விமர்சிக்கின்றனர். அறிவியல் நிறுவனங்கள் ஆதாரங்களின் அடிப்படையில் செயல்பட வேண்டுமே தவிர, ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தைப் பரப்புவதற்காகச் செயல்படக்கூடாது என்பது இவர்களின் கருத்தாக உள்ளது. மேலும், புற்றுநோய் போன்ற கொடிய நோய்களுக்கான மருந்துகளைக் கண்டறியப் பயன்படுத்த வேண்டிய ஆராய்ச்சி நிதியை, இதுபோன்ற விஷயங்களுக்குச் செலவிடுவது தேவையற்றது என்றும் விமர்சிக்கிறார்கள்.

மத்திய அரசு

அதேநேரம் இந்த ஆராய்ச்சி திடீரெனத் தொடங்கப்பட்டது அல்ல. மத்திய அரசின் ‘சூத்ரா-பிக்’ (SUTRA-PIC) என்ற திட்டத்தின் ஒரு பகுதியாகவே இது மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு சுமார் 98 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், நாட்டுப் பசுக்களின் பொருட்கள் மூலம் சுகாதாரம், விவசாயம் மற்றும் ஊட்டச்சத்து துறைகளில் என்னென்ன நன்மைகளை பெறலாம் என்பதை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் கீழ் ஏற்கனவே பல ஐஐடி நிறுவனங்கள் பசு சார்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *