Cricket
oi-Yogeshwaran Moorthi
நாட்டிங்ஹாம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்திய அணியின் இந்த தோல்விக்கு மோசமான பேட்டிங் ஆர்டரே காரணமாக அமைந்துள்ளது. மீண்டும் மீண்டும் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் ஒரே டெம்ப்ளேட்டில் விக்கெட்டை பறிகொடுத்து வருகின்றனர்.
நாட்டிங்ஹாமில் நடைபெற்ற 3வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணியிடம் 125 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதே கிடையாது. இதனால் இந்த தோல்வி இந்திய அணியின் மிகப்பெரிய அவமானம் என்று ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

இங்கிலாந்து அணி 201 ரன்கள் விளாசிய அதே பிட்சில், இந்திய அணி 76 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இருக்கிறது. இதனால் இந்திய அணியின் தோல்விக்கு மோசமான பேட்டிங் ஆர்டரே காரணமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அபிஷேக் சர்மா மற்றும் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாட முயன்று விக்கெட்டான பின் வந்த எந்த பேட்ஸ்மேனும் பொறுப்புடன் விளையாடவில்லை.
அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் எப்படி விக்கெட்டை இழந்தாரோ, அதேபோல் மீண்டும் ஒரு முறை ஆட்டமிழந்துள்ளார். இஷான் கிஷன் மீண்டும் இன்கன்சிஸ்டன்சியுடன் விளையாட தொடங்கிவிட்டார். அதேபோல் திலக் வர்மா ஸ்பின்னர்களை எதிர்கொள்ள இன்னும் தடுமாறிக் கொண்டே இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் திலக் வர்மாவை டாப் 4க்குள் விளையாட வைக்க வேண்டும். அவரின் பேட்டிங் ஸ்டைலுக்கு அதுதான் சரியாகவும் இருக்கும். ஆனால் இந்திய அணியோ நம்பர் 5 அல்லது நம்பர் 6 பேட்டிங் வரிசையில் திலக் வர்மாவை களமிறக்கி வருகிறது. இந்திய அணியின் துணைக் கேப்டன் என்பதால், அவரை பெஞ்ச் செய்யவும் முடியாமல் கம்பீர் தவித்து வருகிறார்.
இன்னும் சொல்லப் போனால் திலக் வர்மாவை விடவும் கடந்த சில ஆண்டுகளாகவே சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா அதிக பங்களிப்பை இந்திய அணிக்கு கொடுத்துள்ளனர். நியாயமாக சஞ்சு சாம்சன் தான் துணைக் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டிருக்க வேண்டும். எதன் அடிப்படையில் திலக் வர்மா நியமனம் செய்யப்பட்டார் என்பதே கேள்வியாக உள்ளது.
திலக் வர்மாவின் நம்பர் 5 பேட்டிங் வரிசையில் இஷான் கிஷனை இறக்கிவிட்டு சஞ்சு சாம்சனை நம்பர் 3ல் களமிறக்கினாலே, இந்திய அணியின் பேட்டிங் பிரச்சனைகளுக்கு எளிதாக விடையை கண்டறிய முடியும். ஆனால் சஞ்சு சாம்சனை வெளியேற்றிவிட்டு, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் திலக் வர்மாவை ஒரே அணியில் இந்திய நிர்வாகம் விளையாடுவது தற்கொலை செய்யும் முயற்சியாகவே அமையும்.