"ஸ்டாலினைப் பார்த்து அரசியலுக்கு வந்து சில மாதங்களேயானவர்கள் விமர்சிப்பது அற்பமானது"- டிடிவி தினகரன்

Spread the love

இன்று அதிமுக-வின் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்கள் 15 ஆயிரம் பேருடன் த.வெ.க.வில் இணைந்து கொண்டனர்.

இந்த நிலையில், அமுமுக தலைவர் டிடிவி தினகரன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது,“தற்போதைய த.வெ.க அரசு பொருந்தாத கூட்டணி ஆட்சி நடத்துகிறது. கம்யூனிஸ்ட் மற்றும் இதர கூட்டணிக் கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தலிலும், முந்தைய சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க-வின் உதவியோடுதான் வெற்றி பெற்றன.

திருச்சி தொகுதியில் துரை வைகோ வெற்றி பெற்றதற்கும் தி.மு.க-வின் உழைப்பும், அதன் சின்னமும்தான் காரணம். முன்பு அ.மு.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட காமராஜ், தவெக-வுக்கு ஆதரவு எனக் கடிதம் கொடுத்தபோதே குதிரைப் பேரம் நடந்ததாக ஆளுநரிடம் புகார் அளித்தோம்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

வைகோ வைக்கும் குற்றச்சாட்டுகளும், அவர் தவெக-வுக்கு ஆதரவு அளிப்பதற்குச் சொல்லும் காரணமும் அவரே அவர் தகுதியைக் குறைத்துக்கொள்ளும் வகையில் இருக்கின்றன. இது எனக்கு வருத்தமாக இருக்கிறது.

தற்போது பதவி ஆசைக்காகவும், தவறான வாக்குறுதிகளை நம்பியும் 25-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களை விஜய் தங்கள் பக்கம் இழுத்துள்ளார். அ.தி.மு.க-வால் பலமுறை அமைச்சர்களாகவும், எம்.எல்.ஏ-க்களாகவும் இருந்துவிட்டு, இப்போது தலைமை சரியில்லை என்று கூறி தவெக-விற்கு ஆதரவு அளிப்பது அவர்களின் சுயநலத்தையே காட்டுகிறது.

2017-ல் என்னை அ.தி.மு.க-விலிருந்து வெளியேற்றினாலும், ஜெயலலிதாவின் தொண்டன் என்ற முறையில் கடினமான சூழ்நிலையிலும் அ.தி.மு.க கூட்டணியில் அ.ம.மு.க உறுதியாகத் தொடரும். முந்தைய ஆட்சியில் ஊழல் வழக்குகளில் சிக்கிய முன்னாள் அமைச்சர்களைத் தற்போது கட்சியில் சேர்த்துக் கொள்கிறார்கள்.

மாதாந்திர மின்சாரக் கணக்கீடு மற்றும் 200 யூனிட் இலவச மின்சாரம் என்ற வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றாமல் ஏமாற்றியுள்ளனர்.

தவெக தொண்டர்கள்
தவெக தொண்டர்கள்

விவசாயக் கடன் ரத்து, கன்னியாகுமரி அணுக்கனிமச் சுரங்கத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு, தற்போது அதற்கு நீட்டிப்பு வழங்கியது எனக் குழப்பமான அரசாகவே இயங்குகிறது.

மனிதவளத்துறை அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சையில் சிக்கியபோது, அது மாத்திரை எனக் கூறியது, ஸ்டாலினைப் பார்த்து, அரசியலுக்கு வந்து சில மாதங்களேயானவர்கள் விமர்சிப்பது என அற்பமான அரசியலில் ஈடுபடுகிறார்கள். டெல்டா மாவட்டங்களில் நெல்லைத் தவிர வேறு பயிர் நட முடியாது என்ற எதார்த்தம் கூடத் தெரியாமல் அமைச்சர்கள் தற்குறித்தனமாகப் பேசுகிறார்கள். எந்தத் துறைக்கு எந்த அமைச்சர் என்று தெரியாத அளவிற்கு நிர்வாகக் குழப்பம் நீடிக்கிறது.” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *