ஸ்டாலின் உடல்நிலை எப்படி இருக்கு?….வெளியான புதிய தகவல்! – Kumudam

Spread the love

தி.மு.க. சார்பில் பெரியார் பிறந்த நாள், அண்ணா பிறந்த நாள், தி.மு.க. தொடக்க நாள் ஆகிய நிகழ்வுகளை ஒன்றிணைத்து முப்பெரும் விழாவாக ஆண்டுதோறும் அண்ணா பிறந்த நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் கட்சியின் முன்னோடிகளுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படும்.

அந்த வகையில் இந்த ஆண்டும் முப்பெரும் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை நடைபெறுவதாக இருந்தது. மேலும் வள்ளுவர் கோட்டத்தில் அண்ணா சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் அவர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து டாக்டர்களின் அறிவுரையின் பேரில் மு.க.ஸ்டாலின் வீட்டில் இருந்து ஓய்வு எடுத்து வருகிறார். இதனால் அவர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வரவில்லை. எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சிக்கு வந்த பொதுச்செயலாளர் துரைமுருகன், நிருபர்களிடம் கூறுகையில், “மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் வந்துள்ளதால், இந்த நிகழ்ச்சியில் அவரால் பங்கேற்க முடியவில்லை. தி.மு.க. முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுகிறது. விழா நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் பதிவிட்டுள்ளதாவது, “எனது உடல்நலம் குறித்து அன்போடு விசாரித்த அனைவருக்கும் நன்றி! வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட காய்ச்சலைத் தொடர்ந்து, மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறேன். இதன் காரணமாக, ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

கழகப் பொதுச் செயலாளர் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் ஒத்திவைக்கப்பட்ட முப்பெரும் விழாவிற்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும். தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள், கலையுலக நண்பர்கள் எனது அலுவலகத்தைத் தொடர்புகொண்டு, எனது உடல்நலம் குறித்து அன்போடு விசாரித்துள்ளனர். கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமின்றி, பிற கட்சிகள் மற்றும் இயக்கங்களின் தலைவர்கள் காட்டிய அன்பிற்கும் அக்கறைக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மருத்துவர்களின் அறிவுரைப்படி, இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வீட்டிலேயே ஓய்வெடுக்க உள்ளேன். பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான நேற்று, கழக உடன்பிறப்புகள் மேற்கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்தேன். அதேபோல், நாளை செப்டம்பர் 17 அன்று தந்தை பெரியாரின் பிறந்தநாளையும், திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட நாளையும் கழக உடன்பிறப்புகள் எழுச்சியுடன் கடைப்பிடிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

நாளை தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதுடன், தலைமைக் கழகம் அறிவித்துள்ளபடி, சமூகநீதி நாள் உறுதிமொழியை அனைத்து கழக அலுவலகங்களிலும் ஏற்றிட வேண்டும். கழகத்தின் 78-ஆம் ஆண்டு தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், கழகக் கொடிகளைப் புதுப்பித்து ஏற்றிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” என்று பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *