செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் உலகம் முழுவதும் மெமரி சிப்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணமாக ஐபோன் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் சாதனங்களின் விலை விரைவில் கடுமையாக உயர உள்ளது. இது குறித்து வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இதழுக்கு ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் சமீபத்தில் அளித்த பேட்டியில், “ஆப்பிள் தயாரிப்புகளின் விலை ஏற்றம் தவிர்க்க முடியாதது” என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த விலை ஏற்றத்திற்கு முக்கியக் காரணம் நாமெல்லாம் கொண்டாடும் AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சிதான். AI தொழில்நுட்பத்தை இயக்க பெரிய அளவிலான டேட்டா சென்டர்கள், சர்வருக்கு அதிக திறன் கொண்ட ரேம், ஸ்டோரேஜ் சிப்கள் தேவைப்படுகின்றன.
இதனால் சிப் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை லாபம் தரும் AI சர்வருக்கு திருப்பி விட்டுள்ளன. எனவே ஸ்மார்ட்போன், லேப்டாப்களுக்குத் தேவையான மெமரி சிப்களுக்கு சந்தையில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, அவற்றின் விலை அக்டோபர் 2025 முதல் இரண்டு மடங்கிற்கும் மேலாக உயர்ந்துவிட்டது.
இதுவரை இந்த உதிரிபாகங்களின் விலை ஏற்றத்தை ஆப்பிள் நிறுவனமே ஏற்றுக்கொண்டு, வாடிக்கையாளர்களுக்கு சுமை இல்லாமல் பார்த்துக்கொண்டது. ஆனால், தற்போது நிலைமை கைமீறிப் போய்விட்டதால், வேறு வழியின்றி விலையை ஏற்ற வேண்டிய கட்டாயத்திற்கு ஆப்பிள் தள்ளப்பட்டுள்ளது. வரவிருக்கும் iPhone 18 Pro மாடல்களின் விலை தோராயமாக $270 (சுமார் ₹22,500) வரை உயர வாய்ப்புள்ளதாக சந்தை வல்லுநர்கள் கணிக்கின்றனர்.