Last Updated:
புதுச்சேரி சாமிப்பிள்ளைத்தோட்டம் ஸ்ரீ மகாசக்தி பரிகார வாராகி அம்மன் ஆலயத்தில் வாராகி ஜெயந்தியை முன்னிட்டு, ₹1 லட்சம் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
புதுச்சேரி சாமிப்பிள்ளைத்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மகாசக்தி பரிகார வாராகி அம்மன் ஆலயத்தில், வாராகி ஜெயந்தியை முன்னிட்டு பக்தி பரவசத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இதில், வாராகி அம்மனுக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஆஷாட நவராத்திரியின் ஐந்தாம் நாளாகக் கொண்டாடப்படும் வாராகி ஜெயந்தி விழாவை முன்னிட்டு, அதிகாலை முதலே ஆலயத்தில் சிறப்பு யாக பூஜைகள், அபிஷேகங்கள் மற்றும் அர்ச்சனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, 108 கிலோ மலர்களால் அம்மனுக்கு மலர் அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னர் பக்தர்களின் காணிக்கையாக உண்டியலில் செலுத்தப்பட்ட தொகை வங்கியில் புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றப்பட்டு, அந்த நோட்டுகளைக் கொண்டு வாராகி அம்மனுக்கு கண்கவர் வகையில் அலங்காரம் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த அலங்காரத்தை காண புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்து, வாராகி அம்மனை வழிபட்டு அருளாசி பெற்றனர்.
ஆலய நிர்வாகத்தினர் கூறுகையில், பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைத் தொகையை வங்கியில் புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றி, ஆண்டுதோறும் வாராகி ஜெயந்தியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பண அலங்காரம் செய்து வழிபாடு நடத்துவது வழக்கமாக இருந்து வருகிறது என்றனர்.
இந்த விழாவையொட்டி ஆலய வளாகம் முழுவதும் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்ததுடன், பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த வாராகி அம்மனை தரிசிக்க நாள் முழுவதும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
Puducherry (Pondicherry)