தொழிலாளர்களுக்கான அடிப்படை உரிமைகள்கூட எங்களுக்கு முறையாக கிடைப்பதில்லை. இரவு நேர ஷிஃப்ட் என்றால் நாங்கள் மாலை 4:50 மணிக்கே ரிப்போர்ட் செய்ய வேண்டும். மறுநாள் காலை 8:20க்குதான் பணியிலிருந்து வெளியே வர முடியும். கிட்டத்தட்ட 14 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். அதேமாதிரி, பகல் ஷிஃப்ட் என்றால் காலை 7:50 மணிக்கே ரிப்போர்ட் செய்ய வேண்டும். மாலை 5:20 க்குதான் பணியிலிருந்து வர முடியும். இதில் சிக்கல் என்னவெனில், சென்னையில் சைதாப்பேட்டை, மயிலாப்பூர், தாம்பரம், பெரும்பாக்கம் பகுதிகளில் மட்டும்தான் தீயணைப்பு காவலர்களுக்கான குடியிருப்பு வீடுகள் இருக்கின்றன. குடியிருப்புகளிலிருந்து ஸ்டேஷனுக்கு வந்து செல்லவே ஒன்றிரண்டு மணி நேரம் ஆகிவிடுகிறது. அப்படியெனில் எப்படி குடும்பத்தோடு நேரம் செலவிட முடியும்? வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை என்கிறார்கள்.
அதுவும் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை. ஒரு நாள் விடுப்பு எடுக்க வேண்டுமெனில் தொடர்ந்து 24 மணி நேரத்துக்கும் சேர்த்து ஷிஃப்ட் பார்க்கச் சொல்கிறார்கள். யாருடைய ஷிஃப்டையாவது நாம் சேர்த்து பார்க்கும்போது அவருக்கு ஒரு 12 மணி நேர விடுப்பு கிடைக்கும். அவர் வந்தவுடன் அவர் நம்முடைய ஷிஃப்டை சேர்த்து பார்ப்பார். அப்போது நமக்கு 12 மணி நேர விடுப்பு கிடைக்கும். இதை எப்படி வார விடுமுறையாக எடுத்துக் கொள்ள முடியும்? வேலை செய்த களைப்பை கலைவதற்குள்ளேயே அடுத்த ஷிஃப்ட் வர வேண்டும். அதேமாதிரி, தீயணைப்பு காவலர்களுக்கு ஒரு நாளைக்கு எத்தனை அழைப்புகள் வந்தாலும் ஒரு நாள் படியாக 300 ரூபாய்தான் கொடுக்கிறார்கள். அதையும் மாத மாதம் கொடுப்பதில்லை.