150 ரூபாயில் முடியும் மருத்துவச் செலவு! – அருப்புக்கோட்டை ஏழைகளின் காப்பாளர் டாக்டர் எஸ்.எஸ்.கே | Three Generations of Unbroken Trust in a Humble Pediatrician

Spread the love

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

அருப்புக்கோட்டையில் டவுனில்தான் இருக்கிறது எஸ்.எஸ்.கே ஆஸ்பத்திரி. காய்ச்சல், தலைவலி போன்ற பல வகையான உடம்பு பிரச்சனைகள் எதுவென்றாலும் இவரிடம் தான் நாங்கள் செல் வோம். எங்கள் குடும்ப மருத்துவர் இவர் மட்டும் தான். இவரை விட்டு வேற யாரிடமும் செல்ல மாட்டோம். அருப்புக்கோட்டையைச் சுற்றி உள்ள எல்லா கிராமத்து மக்களும் இவரைத்தான் கடவுள் போல நம்பி இருப்பாங்க.

காசுமே குறைச்சு தான் வாங்குவார். வைத்தியம் நல்லா இருக்கும். காய்ச்சலுனு போனால் இரண்டு ஊசி மட்டும் தான் போடுவார். மூணு வேளைக்கு மாத்திரை கொடுப்பார். ஒரு ஊசிக்கு 50 உரூபா மட்டும்தான் வாங்குவார். இரண்டு ஊசிக்கு 100 உரூபா மட்டுமே மாத்திரை 50 ரூபா 150 உரூபால மருத்துவச் செலவு முடிந்துவிடும். உடனே சரியா கிவிடும்.

“உடம்புல தொந்தரவு இருந்தா மட்டும் வாங்க!”

அப்படின்னு தான் சொல்லுவாரு. இப்படிப்பட்ட டாக்டர் தேடினாலும் கிடைக்காது. எல்லோரிடமும் சகஜமா பேசுவார். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது அம்மாவுக்கு டைஃப்பாயிடு காய்ச்சல் வந்துருச்சு. ரொம்ப முடியாம இருந்தாங்க. கவலைக்கிடமாக இருந்தது. இவரிடம் தான் அம்மா போனாங்க. ஒரு வாரம் மருத்துவமனையில் தங்கி நல்ல சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்தாங்க. எங்க அம்மாவை நல்லபடியாக திருப்பி எங்களுக்கு கொடுத்தார். எல்லாமே சரியாகிவிட்டது. இவருடைய முழுப்பெயர் இராமச்சந்திரன் எஸ். எஸ். கே

ஆனால் எல்லோரும் இவரை எஸ். எஸ். கே டாக்டர் என்று தான் கூப்பிடுவாங்க.

இவர் குழந்தைகள் பொது நல மருத்துவர் சின்ன வயசு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையும் எல்லோரும் இவரிடம் தான் வருவார்கள். அவரால் பார்க்க முடிந்ததை மட்டும்தான் பார்ப்பார். பார்க்க முடியாத பெரிய உடல் உபாதைகளை மதுரை இராஜாஜி மருத்துவமனைக்குத் தான் எழுதிக் கொடுப்பார். அவருக்கு தெரிஞ்ச டாக்டர் கிட்டச் சொல்லி ஒரு நல்ல வழியைக் காட்டுவார்.

“எல்லாமே சரியா போயிடும்! ஒரு பிரச்சனையும் இல்ல! இது எல்லாத்துக்கும் வர்ற தொந்தரவு தான்!”

என்று ஆதரவாக பேசும் பொழுது உடம்பில் இருக்கும் நோய் பாதி ஓடிவிடும். இப்படி வருகிற நோயாளிகளிடம் எளிமையாக பேசுவார்.

காய்ச்சல், சளிக்கு மாத்திரை விழுங்குவதற்கு குழந்தைகளுக்கு கடினமாக இருந்தால், இனிப்பான டானிக்கையை எழுதிக் கொடுத்து அதன் மூலம் நோயை குணப்படுத்தி விடுவார்.

எங்களுடைய தாத்தாவின் காலத்தில் இருந்தே இவர் சிறப்பான மருத்துவம் செய்து வருகிறார். இவருடைய மருத்துவமனை மிகவும் சிறியதாக மட்டுமே இருக்கும். பத்து நாற்காலிகள், இரண்டு படுக்கை வசதி கொண்ட அறைகள் மட்டுமே இருக்கும். காலையில் 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை அருப்புக்கோட்டையிலும் மாலை 6:00 மணி முதல் 10.00 மணி வரை பாளையம்பட்டியிலும் மருத்துவம் பார்ப்பார். இரண்டு இடங்களிலும் கிளினிக் வைத்துள்ளார். மிகவும் எளிமையாக இருப்பார். எல்லோரிடமும் அன்பாகவும், மரியாதையாகவும் பேசுவார். குழந்தைகளிடம் பேசிக்கொண்டே ஊசிகளை செலுத்தி விட்டு “எறும்பு உன்னை கடித்து விட்டது!” என்று நகைச்சுவையும் செய்வார். பெரும்பாலான மக்கள் இவரிடமே வருவார்கள். கொரோனாக் காலங்களில் கொரோனாவிற்குச் சிகிச்சை அளிப்பதற்கு எத்தனையோ அரசு மற்றும் பெரிய தனியார் மருத்துவமனைகள் இருந்தாலும் கூட எல்லா மக்களும் இவரையே நாடினார்கள். கொரோனாக் காலகட்டங்களில் எனக்கு மிகவும் உடல்நிலை சரியில்லாமல் போனது.

இவர் கொடுத்த மருந்து மாத்திரைகளும் அறிவுரைகளும் எனக்கு நல்ல உடல் முன்னேற்றத்தைக் கொடுத்தன. மரணத்தின் வாசல் படி வரை சென்று வந்தவன் நான். எங்களுடைய வாழ்க்கையில் இவரை நாங்கள் மறக்கவே மாட்டோம். மனித உருவில் வாழும் தெய்வம் இவர் மட்டுமே என்று எங்க அம்மா அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார். பழைய நினைவுகள் வரும்பொழுது… இவருடைய மருத்துவமனை மட்டும் ஏழை மக்களுக்காக எப்போதும் திறந்து இருக்கும் .இவரிடம் மருத்துவம் பார்ப்பதற்கு ஏழை எளிய மக்கள் இவர் வருகையை எண்ணி தினமும் காத்துக் கொண்டிருப்பார்கள். அருப்புக்கோட்டை என்றால் இவரைத் தெரியாத மக்கள் யாரும் இருக்க மாட்டார்கள். எல்லோருக்கும் பிடித்தமானவர். எல்லோர் மனதிலும் இன்றும் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர்.

பெ.சிவக்குமார்

முதுகலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு

கே. ஆர். பி கலை மற்றும் அறிவியல் கல்லூரி

காக்கிவாடன்பட்டி

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *