உலகக்கோப்பை டிக்கெட் விலை நிர்ணயம் குறித்து ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வந்த சூழலில், இந்த மறுவிற்பனை விலை மேலும் சர்ச்சையை அதிகரித்துள்ளது. முன்னதாக, கோல் கம்பத்திற்குப் பின்னால் உள்ள நான்கு டிக்கெட்டுகள் சுமார் 2.3 மில்லியன் டாலர்களுக்கு மறுவிற்பனைக்கு வந்ததாக வெளியான செய்திகளும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
2022 கத்தார் உலகக்கோப்பையுடன் ஒப்பிடும்போது, இந்த முறை அதிகாரப்பூர்வ டிக்கெட் விலையே பல மடங்கு அதிகமாக உள்ளது. கத்தாரில் இறுதிப்போட்டிக்கான அதிகபட்ச அதிகாரப்பூர்வ டிக்கெட் விலை சுமார் 1,600 டாலராக இருந்த நிலையில், 2026 இறுதிப்போட்டிக்கான சில அதிகாரப்பூர்வ டிக்கெட்டுகளின் விலையே 11,000 டாலர்களைத் தாண்டியுள்ளது. இது மறுவிற்பனை சந்தைக்கு முன்பான விலையாகும்.
இந்த கடுமையான விமர்சனங்கள் குறித்து ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பொழுதுபோக்கு சந்தையின் யதார்த்தங்களுக்கு ஏற்பவே விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
“அமெரிக்காவில் டிக்கெட்டுகளை மறுவிற்பனை செய்வது சட்டப்பூர்வமானது. நாங்கள் குறைந்த விலையில் டிக்கெட்டுகளை விற்றால், அவை மறுவிற்பனை சந்தையில் இன்னும் அதிக விலைக்கு விற்கப்படும்,” என்று அவர் கூறினார்.
மேலும், 2.3 மில்லியன் டாலர் டிக்கெட் குறித்து நகைச்சுவையாகக் குறிப்பிட்ட அவர், “யாராவது அவ்வளவு பணம் கொடுத்து டிக்கெட் வாங்கினால், அவருக்காக நானே தனிப்பட்ட முறையில் ஒரு ஹாட் டாக் மற்றும் கோக் வாங்கி வருவேன்” என்றார். ஒரு டிக்கெட் அதிக விலைக்கு பட்டியலிடப்பட்டிருப்பதால், யாராவது அதை வாங்கிவிடுவார்கள் என்று அர்த்தமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஃபிஃபா நேரடியாக மறுவிற்பனை விலைகளை நிர்ணயிக்காவிட்டாலும், அதிகாரப்பூர்வ மறுவிற்பனை தளங்கள் மூலம் நடைபெறும் ஒவ்வொரு பரிவர்த்தனையிலும், டிக்கெட் வாங்குபவரிடம் இருந்து 15% மற்றும் விற்பவரிடம் இருந்து 15% என கட்டணம் வசூலிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், விண்ணை முட்டும் இந்த மறுவிற்பனை விலைகள் மூலம் ஃபிஃபாவும் லாபம் ஈட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.