International
oi-Vignesh Selvaraj
டெஹ்ரான்: அமெரிக்கா – ஈரான் இடையே பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், 28 இந்தியப் பணியாளர்களை ஏற்றிச் சென்ற எல்பிஜி டேங்கர் கப்பல் ஒன்று ஈரானிய கடல் பகுதியில் இன்று தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியர்கள் சென்ற கப்பல் மீது தாக்குதல் நடைபெற்றதைத் தொடர்ந்து, டெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் உடனடியாக நிலைமையைக் கண்காணித்து, கப்பலில் இருந்த அனைத்து இந்தியர்களும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்துள்ளது.

மொசாம்பிக் கொடியை ஏந்திய ‘திஷா’ என்ற எல்பிஜி டேங்கர் இன்று அதிகாலையில் ஈரானிய கடல் எல்லைக்குள் தாக்கப்பட்டதாக, டெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில் உறுதிப்படுத்தியுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான அந்தக் கப்பலில் 28 இந்தியப் பணியாளர்கள் உள்ளனர். தூதரகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறது, மேலும் அனைத்து இந்தியப் பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை உக்ரைனின் ஒடெசா துறைமுகத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே எம்.வி. கோல்டன் லியோ என்ற வர்த்தக சரக்குக் கப்பல் தாக்கப்பட்டதில் நான்கு இந்தியர்கள் உயிரிழந்தனர், மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.
கடந்த சனிக்கிழமை செங்கடலில் ரஷ்யா அருகே 10 பணியாளர்களை ஏற்றிச் சென்ற வர்த்தகக் கப்பல் தாக்கப்பட்டதில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். தாக்குதல் நடந்த நேரத்தில், மூன்று இந்திய நாட்டினர் உட்பட 10 பணியாளர்கள் அந்தக் கப்பலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடல்சார் பணியாளர்கள், இராணுவம் அல்லாத கப்பல்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகள் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று இந்தியா மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.