3 நாள் கஸ்டடி.. சில மணி நேர தனிமை.. அன்வர்தீன் மரணம்.. பழனி நிலமோசடியில் இதுவரை நடந்தது என்ன? | Palani Temple Rs.100-Crore Land Scam: From Custodial Case to High-Profile Arrests

Spread the love

Tamilnadu

oi-Shyamsundar I

பழனி: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமான, ₹100 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள 1.4 ஏக்கர் மடத்து நிலத்தை போலியான ஆவணங்கள் மூலம் முறைகேடாகப் பதிவு செய்து ஆக்கிரமித்த விவகாரம் தமிழக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் சிபிசிஐடி தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான வழக்கறிஞர் அன்வர்தீன் சிறையில் உயிரிழந்த சம்பவமும், தலைமறைவாக இருந்த சார்-பதிவாளர் கொடைக்கானலில் கைது செய்யப்பட்ட நிகழ்வும் இந்த வழக்கின் போக்கையே முற்றிலும் மாற்றியமைத்துள்ளன.

Palani

ரூ.100 கோடி நில மோசடியின் பின்னணி

பழனி கோவில் அருகே உள்ள பார்க் ரோட்டில் அமைந்துள்ள 1.4 ஏக்கர் நிலம், வரலாற்று ரீதியாகப் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமானதாகும். 1888-ஆம் ஆண்டைய அறக்கட்டளை ஆவணங்களின்படி, பக்தர்களின் பயன்பாட்டிற்கும் ஆன்மீகப் பணிகளுக்கும் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டிய இந்த நிலத்தை விற்பனை செய்யவோ அல்லது பிறருக்கு மாற்றவோ சட்டப்பூர்வமாகத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், இந்த நிலத்தின் பிரதான அமைவிடத்தையும் சந்தை மதிப்பையும் குறிவைத்து ஒரு கும்பல் செயல்பட்டுள்ளது. 1998-ஆம் ஆண்டு முதல் திட்டமிட்டு, போலியான தாய் பத்திரங்கள் மற்றும் போலி பட்டாக்களை உருவாக்கி, இந்த மடத்து நிலத்தை தனியார் நபர்களுக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்ய ஆவணங்கள் தயார் செய்யப்பட்டன.

அதிகாரிகளின் கூட்டு மற்றும் நீதிமன்ற உத்தரவு மீறல்

இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் இந்த நிலப் பதிவிற்குத் தொடர்ச்சியாகக் கடும் ஆட்சேபனை தெரிவித்து வந்தனர். மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தின் தெளிவான தடைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் அமலில் இருந்தன. ஆனால், பழனி இணைச் சார்-பதிவாளராகப் பணியாற்றிய ஜஸ்டின் மணிகண்டன் சுப்பிரமணியன், இந்த எதிர்ப்புகளையும் நீதிமன்ற உத்தரவுகளையும் முற்றிலும் புறக்கணித்து, சட்டவிரோத விற்பனை ஆவணங்களுக்கு அதிகாரப்பூர்வ ஆவண எண்களை வழங்கிப் பதிவை முடித்துக் கொடுத்துள்ளார்.

FIR காட்டும் உண்மை

கோவில் நிர்வாகத்தின் நிலப் பிரிவு கண்காணிப்பாளர் முருகானந்தம் கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ள அந்த அதிகாரப்பூர்வ ஆவணங்களின்படி, இந்த மெகா மோசடியின் பின்னணியில் உள்ள பெயர்கள்..

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முருகதாஸ். இவர் ‘திருப்புகழ் சாமிகள், முருகதாஸ் சாமிகள் மற்றும் தண்டபாணி சாமிகள் டிரஸ்ட்’ என்ற போலியான ஒரு தனியார் அறக்கட்டளையின் நிர்வாகி என்று தன்னைத்தானே அறிவித்துக் கொண்டு, இந்த 1.40 ஏக்கர் அரசு நிலத்திற்குத் தான் தான் ஓனர் என்பது போல ஆவணங்களைத் தயாரித்துள்ளார்.

வாங்கிய நபர்கள்:

உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த வெள்ளத்துரை மற்றும் பழனியைச் சேர்ந்த சேதுபதி. ரூ.100 கோடி மதிப்புள்ள இந்த நிலத்தை, வெறும் ரூ.2 கோடிக்குக் கைமாற்றி, தங்களுக்குள் கிரயப் பத்திரம் தயாரித்துக் கொண்ட து இவர்கள்தான். சஸ்பெண்ட் செய்யப்பட்ட பொறுப்பு சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுடன் சேர்ந்து, இந்த முருகதாஸ், வெள்ளத்துரை, சேதுபதி ஆகிய மூவர் மீதும் தான் மோசடி, போலி ஆவணம் தயாரித்தல், கிரிமினல் சதி உள்ளிட்ட 5 கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பாய்ந்துள்ளது.

ஏன் இத்தனை நாட்கள் பெயர்கள் மறைக்கப்பட்டன?

வழக்குப்பதிவு செய்யப்பட்ட பிறகும் இந்த நபர்களின் பின்னணியை அதிகாரிகள் மற்றும் சில ஊடகங்கள் வெளிப்படையாகப் பேசத் தயங்கியதற்குப் பின்னால் மிகப் பெரிய நெருக்கடி இருப்பதாகக் கூறப்படுகிறது:

உடுமலைப்பேட்டை வெள்ளத்துரையும், பழனி சேதுபதியும் வெறும் முகமூடிகள் மட்டுமே. இவர்களது பின்னணியைத் தோண்டினால், மண்டல அளவிலும் மாநில அளவிலும் உள்ள முக்கிய அரசியல் புள்ளிகளின் பெயர்கள் மற்றும் அதிகாரத்தில் இருக்கும் சில தலைகளின் தொடர்புகள் வெளியாகும் என்பதால் தான் லோக்கல் போலீசார் ஆரம்பத்தில் மெத்தனம் காட்டினர் என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றன.

1888-ஆம் ஆண்டின் மடத்து ஆவணங்கள், தாலுகா அலுவலகத்தின் வருவாய்த் துறை ஆவணங்கள்என அனைத்தையும் மிகத் துல்லியமாகப் போலியாகத் தயாரிப்பதற்கு, அரசுத் துறையின் உயர் அதிகாரிகள் பலரின் ஆசி இல்லாமல் நடந்திருக்காது என்கிறார்கள்.

அந்தப் புள்ளிகளைக் காப்பாற்றவே இந்தத் தனிநபர்களின் விபரங்கள் பொதுவெளியில் பெரிதாக விவாதிக்கப்படாமல் மௌனம் காக்கப்பட்டது என்றும் எதிர்க்கட்சிகள் புகார்கள் வைக்கின்றன. இந்த வழக்கில் முதல் விசித்திரமே பத்திரப்பதிவு நடந்த விதம் தான். பழனி சார்பதிவாளர் அலுவலகத்தின் வழக்கமான அதிகாரி திடீரென விடுமுறையில் அனுப்பப்படுகிறார் அல்லது அவராகவே செல்கிறார். அதற்குப் பதிலாக, ஜூலை 6-ஆம் தேதி ஒரே ஒரு நாள் மட்டும் கூடுதல் பொறுப்பாக ஜஸ்டின் மணிகண்டன் என்ற அதிகாரி உள்ளே வருகிறார். இவரை இங்கே கூடுதல் பொறுப்பிற்கு போட்டது யார்? மாற்றியது யார்?

இந்து சமய அறநிலையத்துறை ஏற்கனவே இந்த நிலத்தைப் பதிவு செய்யக் கூடாது என 2025 மற்றும் 2026-ல் நான்கு முறை முடக்க உத்தரவுகளை அனுப்பியிருக்கிறது. முந்தைய நாள் கூட மாவட்டப் பதிவாளருக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வளவு எச்சரிக்கைகள் சிஸ்டத்தில் இருக்கும்போது, ஒரே ஒரு நாள் டூட்டிக்கு வந்த அதிகாரிக்கு, இந்த ₹100 கோடி நிலத்தை மட்டும் எவ்வித தங்குதடையுமின்றி கிரயம் செய்து கொடுக்க எப்படித் துணிச்சல் வந்தது?

இதன் மூலம்தான், பக்தர்களின் வாகன நிறுத்தத்திற்குப் பயன்படுத்தப்பட்டு வந்த அந்த நிலம் தனியாருக்கு தாரைவாக்கப்பட்டு உள்ளது. அறநிலையத் துறை அளித்த புகாரின் பேரில், பழனி அடிவாரம் காவல் நிலையத்திலிருந்து இந்த வழக்கு சிறப்புப் பிரிவான சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்

இந்த நில ஆக்கிரமிப்புச் சதியின் பின்னணியில் மூளையாகச் செயல்பட்டு, ஆவணப் போலித்தனங்களை ஒருங்கிணைத்ததாகப் பழனியைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ். அன்வர்தீன் மீது குற்றம்சாட்டப்பட்டது. ஜூலை 28 அன்று சிபிசிஐடி போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

நீதிமன்ற அனுமதியுடன் அன்வர்தீனை 3 நாட்கள் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு, ஆகஸ்ட் 7 வெள்ளிக்கிழமை மாலை அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். அன்றிரவு 9:30 மணியளவில் அவருக்குக் கடுமையான மூச்சுத்திணறல் மற்றும் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், இரவு 10:45 மணியளவில் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

அன்வர்தீனுக்கு ஏற்கனவே நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம் ஆகிய பாதிப்புகள் இருந்ததாகச் சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், காவலில் இருந்தவர் உயிரிழந்ததால், சட்டப்பூர்வ நடைமுறைகளின்படி குற்றவியல் நடுவர் ராஜபிரபு தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சிறப்பு மருத்துவக் குழுவினரால் முழு உடல் சிடி ஸ்கேன் மற்றும் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தலைமறைவாக இருந்த சார்-பதிவாளர் கொடைக்கானலில் கைது

இந்த வழக்கின் மற்றொரு முக்கிய குற்றவாளியான இடைநீக்கம் செய்யப்பட்ட சார்-பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். ஆகஸ்ட் 5 அன்று நீதிமன்றம் அவரது முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது.

இதனைத் தொடர்ந்து தலைமறைவான அவரைப் பிடிக்கச் சிபிசிஐடி தனிப்படை அமைக்கப்பட்டது. கொடைக்கானலில் உள்ள ஒரு வீட்டில் மறைந்திருந்த ஜஸ்டின் மணிகண்டனை சிபிசிஐடி போலீசார் ஆகஸ்ட் 6 அன்று அதிரடியாகக் கைது செய்தனர். கைதான நிலையில், அவருக்கும் நெஞ்சுவலி மற்றும் தலைச்சுற்றல் ஏற்பட்டதால், அவர் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஆகஸ்ட் 21 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் விவரம்

இந்த நில ஆக்கிரமிப்பு மற்றும் போலி ஆவணத் தயாரிப்பு வழக்கில் சிபிசிஐடி இதுவரை 6 முக்கிய நபர்களை முறைப்படி கைது செய்துள்ளது.

எஸ். அன்வர்தீன்: வழக்கை ஒருங்கிணைத்த வழக்கறிஞர் (சிறையில் உயிரிழந்தார்).
ஜஸ்டின் மணிகண்டன் சுப்பிரமணியன்: இடைநீக்கம் செய்யப்பட்ட சார்-பதிவாளர்.
டி. முருகதாஸ்: மடத்தின் முன்னாள் அறங்காவலரின் உறவினர்; நிலத்தின் உரிமையாளராகப் போலி வேடமிட்டவர்.
கே. வெள்ளைத்துரை & டி. சேதுபதி: நிலத்தை வாங்கிய ரியல் எஸ்டேட் நபர்கள்.
ஜெயபிரகாஷ்: போலிப் பத்திரங்களைத் தயாரித்த ஆவண எழுத்தர்

இதுதவிர, திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள பத்திரப்பதிவு ஆவணங்களைச் சரிபார்க்கும் பணியில் இறங்கியுள்ள சிபிசிஐடி, அரசு ஊழியர்கள், பதிவுத்துறை அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் உட்பட்ட 82-க்கும் மேற்பட்டோரிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளது.

அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளும் மீட்புப் பணிகளும்

போலிப் பத்திரங்கள் ரத்து: சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களையும் அதிகாரப்பூர்வமாகச் செல்லாததாக்கி, ரத்து செய்யப் பதிவுத் துறைக்கு இந்து சமய அறநிலையத் துறை கடிதம் எழுதியுள்ளது.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்: ₹100 கோடி மதிப்பிலான அந்த 1.4 ஏக்கர் நிலத்தில் உள்ள வணிகக் கட்டிடங்கள் மற்றும் மருத்துவமனை அமைப்புகளை அகற்றி, நிலத்தை முழுமையாக மீட்பதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

சுதந்திரமான விசாரணை கோரிக்கை: வழக்கறிஞரின் காவல்படி மரணத்தைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் மற்றும் சில சமூக அமைப்புகள் இந்த நில மோசடி வழக்கு முழுவதையும் சிபிஐ (CBI) விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றன.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்குச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை மீட்டெடுக்கும் இந்த வழக்கு, தமிழக பதிவுத்துறை மற்றும் அறநிலையத் துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *