Cricket
oi-Yogeshwaran Moorthi
கொழும்பு: இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் இலங்கை அணியின் இளம் வீரர் சோனல் தினுஷா சதம் விளாசி அசத்தியுள்ளார். இதன் மூலமாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3 சதங்களை விளாசிய 8வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதனால் ஆட்டம் டிராவை நோக்கி பயணிக்க தொடங்கி இருக்கிறது.
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 503 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய இலங்கை அணி சோனல் தினுஷாவின் அபார சதம் காரணமாக 290 ரன்களை எடுத்தது. 213 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், இலங்கை அணிக்கு ஃபாலோ ஆன் கொடுக்கப்பட்டது.

இதன்பின் 2வது இன்னிங்ஸை எச்சரிக்கையுடன் தொடங்கிய இலங்கை அணி சிறப்பாக பேட்டிங் ஆடியது. 4வது நாள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ரன்களை எடுத்திருந்தது. இதன்பின் தினுஷா – நுவந்தா கூட்டணி கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கியது. முதல் செஷனில் இலங்கை அணி விக்கெட்டை கூட விட்டுக் கொடுக்கவில்லை.
உணவு இடைவேளைக்கு பின் நுவந்தா 46 ரன்களிலும், பிரபத் ஜெயசூர்யா 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த குமாரா ஒரு பக்கம் ரன்களே எடுக்காமல் நங்கூரமிட்டு நிற்க, மறுமுனையில் தினுஷா அபாரமாக ஆடி ரன்களை சேர்த்தார். தேநீர் இடைவேளை முடிவடைந்த பின் சோனல் தினுஷா தனது சதத்தை பூர்த்தி செய்தார்.
அதுமட்டுமல்லாமல் இலங்கை அணி 180 ரன்களுக்கு மேல் முன்னிலையை கடந்துவிட்டது. இந்த சதத்தின் மூலமாக சோனல் தினுஷா பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3 சதங்களை விளாசிய 8வது வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார். அதேபோல் ஆட்டத்தின் இரு இன்னிங்ஸிலும் சதம் அடித்த 8வது இலங்கை வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
தினுஷாவின் அபார ஆட்டம் காரணமாக இலங்கை அணி இந்தப் போட்டியை டிரா செய்யும் சூழல் உருவாகி இருக்கிறது. பலரும் இன்று காலை முதல் செஷனிலேயே இந்திய அணி வெல்லும் என்று நினைத்திருந்தனர். ஆனால் தினுஷாவின் அபார ஆட்டம் இந்திய அணிக்கும், சுப்மன் கில் கனவுக்கும் சிக்கலாக மாறியுள்ளது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதிலும் பின்னடைவு உருவாகியுள்ளது.