பிரதமர் மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சிக்காலத்தின் இரண்டாவது ஆண்டு ஜூன் 9-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையொட்டி, அரசின் பல்வேறு கொள்கைகள் மற்றும் திட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்கான மத்திய அமைச்சரவையின் ஆலோசனைக் கூட்டம் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.
கேபினட் அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள் மற்றும் பிற இணை அமைச்சர்கள் என அனைவரும் பங்கேற்ற இந்த உயர்மட்டக் கூட்டம், சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
இந்தக் கூட்டத்தில் பொருளாதாரம், விவசாயம், தொழிலாளர் நலன் மற்றும் எரிசக்தி உள்ளிட்ட ஒன்பது முக்கிய துறைகளின் செயல்பாடுகள் குறித்து பிரதமர் மோடி விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
குறிப்பாக, மேற்கு ஆசியப் போர் காரணமாக இந்தியா எதிர்கொண்டு வரும் சவால்கள் குறித்து இதில் தீவிரமாக விவாதிக்கப்பட்டது. உலக அளவில் பதற்றமான சூழல் நிலவி வரும் வேளையில், நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.