உத்தரப்பிரதேச மாநிலம் முஜாபர்நகரில் நீதிபதியாகப் பணியாற்றிய ரவிக்குமார் திவாகர் கடந்த 4 மாதத்தில் 22 பேருக்கு மரண தண்டனை வழங்கி உத்தரவிட்டது பெரிய அளவில் பேசப்பட்டது.
அதுவும் 10 வழக்குகளில் 22 பேருக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது. இந்நிலையில் திடீரென மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி பிரேந்திர குமார் சிங் உத்தரவின் பேரில் நீதிபதி திவாகர் விசாரித்து வந்த கொலை மற்றும் கொடூரமான குற்றங்கள் தொடர்பான 97 வழக்குகளின் கோப்புகள் அவரிடமிருந்து திரும்ப பெறப்பட்டுள்ளன.
முசாபர்நகரில் திவாகரின் மரண தண்டனை தீர்ப்புகள் பற்றிய செய்தி வெளியான சில நாட்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் இது தொடர்பாகப் பிறப்பித்துள்ள உத்தரவில், “தற்போது நீதிபதி திவாகர் முன்னிலையில் நிலுவையில் உள்ள வழக்கு கோப்புகள் முசாபர்நகர் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்திற்குத் திரும்ப பெறப்பட்டுள்ளன” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முசாபர்நகரில் நீதிபதி திவாகர் 22 மரண தண்டனைகள் வழங்கிய நிலையில், அவர் வழங்கிய மொத்த மரண தண்டனைகளின் எண்ணிக்கை 35 ஆக உள்ளது. இதில் அவர் பரேலியில் பதவியிலிருந்தபோது 13 பேருக்கு மரண தண்டனை வழங்கினார். உயர் நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்படாத மரண தண்டனைகள் எதுவும் நிறைவேற்றப்படாது என்றாலும் இது போன்று தொடர்ச்சியாக மரண தண்டனைகள் வழங்கப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
திவாகர் முதன்முதலில் 2022ம் ஆண்டு வாரணாசியில் சிவில் நீதிபதியாக இருந்தபோது, ஞானவாபி மசூதி வளாகத்தை வீடியோகிராஃபிக் ஆய்வுக்கு உத்தரவிட்டார். இந்தக் கணக்கெடுப்பில் வுசுகானா பகுதியும் அடங்கும், அங்கு சிவலிங்கம் இருப்பதாக மனுதாரர்கள் குறிப்பிட்டு இருந்தனர்.
இதனை முஸ்லிம் தரப்பில் மறுக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதி சீல் வைக்கப்பட்டது. பின்னர் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை வாரணாசி மாவட்ட நீதிபதிக்கு மாற்றியது.