India
-Vigneshkumar
டெல்லி: இந்தியாவில் தென்மேற்கு பருவமழை இந்நேரம் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், அது இன்னும் பல பகுதிகளில் தொடங்கவில்லை. இதனால் மழை கடுமையாகக் குறைந்துள்ள சூழலில், நிலைமை மோசமாகவே இருக்கிறது. இதனால் சுமார் 40% வரை பருவமழை குறைந்துள்ள நிலையில், இது எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தொடர்பாக நாம் பார்க்கலாம்.
இந்தியாவின் பொருளாதாரத்திற்கும், விவசாயத்திற்கும் முதுகெலும்பாக விளங்குவது தென்மேற்கு பருவமழை. ஆனால், இந்த ஆண்டு ஜூன் மாதம் பாதியைக் கடந்த நிலையிலும், பருவமழை எதிர்பார்த்த வேகத்தில் பெய்யாமல் தேக்கமடைந்துள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

வானிலை மையம்
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய INSAT-3DS சாட்டிலைட் படங்கள் ஒரு கவலையளிக்கும் சூழலை வெளிப்படுத்துகின்றன. இன்று ஜூன் 17ம் தேதி எடுக்கப்பட்ட இந்த புதிய படங்களில், இந்தியாவின் மத்திய மற்றும் மேற்குப் பகுதிகள் மேகக்கூட்டங்கள் இன்றி மிகத் தெளிவாகக் காணப்படுகின்றன. பொதுவாக இந்த காலகட்டத்தில் மத்திய மற்றும் மேற்கு இந்தியாவின் பகுதிகள் அடர்ந்த மழை மேகங்களால் சூழப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் கர்நாடகாவின் உட்பகுதிகள் மேகங்களின்றி வறண்டு காணப்படுகின்றன. இது பருவமழை வலுவிழந்துள்ளதைக் காட்டுகிறது.
40% காலி
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் டேட்டாவின்படி, ஜூன் 4 முதல் ஜூன் 17 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த மழைப் பற்றாக்குறை 40% ஆக அதிகரித்துள்ளது. அதாவது இந்த காலகட்டத்தில் இயல்பான மழை அளவு 65.9 மி.மீ ஆகும். ஆனால், இப்போது பெய்துள்ள மழை அளவு 39.7 மி.மீ ஆக மட்டுமே இருக்கிறது.
மாநிலம் வாரியாக பார்க்கும்போது, குஜராத்தில் தான் நிலைமை மோசம். அங்கு 98% பற்றாக்குறை, அதாவது கிட்டத்தட்ட மழையே இல்லை என்று சொல்லலாம். மகாராஷ்டிராவில் 79% பற்றாக்குறை இருக்கும் சூழலில், மேகாலயாவில் 85% பற்றாக்குறை இருக்கிறது. இது தவிர ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கரில் முறையே 66% மற்றும் 65% பற்றாக்குறை இருக்கிறது. இவை தவிரக் கர்நாடகா, தெலுங்கானா, ஒடிசா, பீகார் மற்றும் அசாம் மாநிலங்களிலும் மழை இயல்பை விட மிகக் குறைவாகவே உள்ளது.
காரணங்கள்
வானிலை நிபுணர்கள் இதற்குக் காரணங்களாகச் சில முக்கிய அம்சங்களைக் குறிப்பிடுகின்றனர்.. அதாவது அரபிக்கடலில் இருந்து நிலப்பகுதியை நோக்கி வரும் ஈரப்பதமான காற்று மிகவும் பலவீனமாக உள்ளது. அதேபோல வளிமண்டலத்தின் மேலடுக்கு காற்று, மழை மேகங்கள் உருவாவதைத் தடுத்து வருகிறது. மேலும், தற்போது மழை மேகங்கள் அனைத்தும் வங்காள விரிகுடா, வடகிழக்கு இந்தியா மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் மட்டுமே குவிந்துள்ளன. இதனால் நாட்டின் மற்ற பகுதிகளுக்கு மழை பரவுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஜூன் மாதம் என்பது இந்தியாவின் காரிஃப் (Kharif) பருவ சாகுபடிக்கு மிக முக்கியமான மாதமாகும். நெல், சோயாபீன்ஸ், பருத்தி மற்றும் பருப்பு வகைகள் பயிரிட இதுவே சரியான தருணமாகும். போதிய மழை இல்லாததால், பல மாநிலங்களில் விவசாயிகள் விதைப்புப் பணிகளைத் தொடங்க முடியாமல் தவித்து வருகின்றனர். மண்ணில் ஈரப்பதம் குறைந்தால், அது பயிர்களின் வளர்ச்சியைப் பாதிக்கும்.
சமாளிக்க முடியும்
இந்தியா கடந்த 60 ஆண்டுகளில் பலமுறை இத்தகைய பருவமழை சவால்களைச் சந்தித்துள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் நாம் உருவாக்கியுள்ள நீர்ப்பாசனக் கட்டமைப்புகள், வறட்சியைத் தாங்கும் பயிர் ரகங்கள் மற்றும் மேம்பட்ட விவசாய தொழில்நுட்பங்கள் இக்கட்டான சூழலைச் சமாளிக்க உதவும் என்று நம்பப்படுகிறது. இந்த நீண்டகால அனுபவம், பருவமழை பொய்த்தாலும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய அரசுக்கும் விவசாயிகளுக்கும் ஒரு பலமாக இருக்கும்.
தற்போதைய சூழல் கவலையளித்தாலும், வானிலை டேட்டாக்கள் ஒரு நம்பிக்கையைத் தருகின்றன. அதாவது ஜூன் 21ம் தேதிக்குப் பிறகு காற்றில் ஈரப்பதம் அதிகரித்து, பருவமழை மீண்டும் வேகம் எடுக்க வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தின் எஞ்சிய நாட்களில் பெய்யும் மழையைப் பொறுத்தே, இந்த ஆண்டின் விவசாய உற்பத்தி மற்றும் பொருளாதார தாக்கம் அமையும். வானிலை ஆய்வு மைய அதிகாரிகளும் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.