Business
oi-Vigneshkumar
சென்னை: செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஏஐ டேட்டா சென்டர்களுக்கான மெமரி சிப் தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மெமரி சிப் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், இது தங்களை போன்ற ஐடி சர்வீஸ் நிறுவனத்தின் தொழிலையும் பாதிப்பதாக ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
இந்த காலத்தில் திரும்பிய பக்கமெல்லாம் ஏஐ குறித்தே பேச்சாக இருக்கிறது. பல்வேறு துறைகளிலும் ஏஐ பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. இது பல்வேறு மாற்றங்களையும் ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக மெமரி சிப்கள் விலை கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து ஏறி வருகிறது.

ஸ்ரீதர் வேம்பு
மெமரி சிப் விலைகள் கடந்த 12 மாதங்களில் சுமார் 500 சதவீதம் உயர்ந்துள்ளதாக வெளியான தகவலை தனது ட்விட்டரில் தளத்தில் பகிர்ந்த ஸ்ரீதர் வேம்பு, மெமரி மற்றும் ஏஐ டோக்கன்களின் விலை உயர்வு காரணமாக தொழில் நடத்துவது மிகவும் கடினமாகி வருவதாக தெரிவித்துள்ளார். மெமரி சிப் விலை மற்றும் ஏஐ டோக்கன்களின் விலை உயர்வு காரணமாக பிஸ்னஸ் செய்வது மிகவும் கடினமாகி வருவதாகவும், இதுவரை வாடிக்கையாளர்களிடம் கட்டணத்தை உயர்த்தாமல் சமாளித்து வந்தாலும், தொடர்ந்து அதுபோல செய்வது கடினமாகி வருவதாகவும் ஸ்ரீதர் வேம்பு குறிப்பிட்டுள்ளார்.
2025 ஆகஸ்ட் முதல் 2026 ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் சில டிடிஆர்5 மெமரி கிட்களின் சராசரி விலை சுமார் 90 டாலரில் இருந்து 425 டாலராக உயர்ந்துள்ளதாக டாம்’ஸ் ஹார்ட்வேர் என்ற அமைப்பு கூறியுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் அதன் விலை சுமார் ரூ.8,600-ல் இருந்து ரூ.40,000 ஆக உயர்ந்துள்ளது. அதிக திறன் கொண்ட மெமரி கிட்களின் விலை இதை விட அதிகமாக உயர்ந்துள்ளது. உதாரணமாக, 128ஜிபி டிடிஆர்5-6400 கிட் தற்போது சுமார் 3,399 டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.3.25 லட்சத்திற்கு விற்கப்படுகிறது. இது முன்பு 329 டாலராக, அதாவது சுமார் ரூ.31,500 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது..
விலை உயர்வு
மெமரி மற்றும் ஏஐ தொடர்பான செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஹோஜோ போன்ற சாப்ட்வேர் நிறுவனங்களும் பாதிக்கப்படுவதாக ஸ்ரீதர் வேம்பு கூறியிருக்கிறார். ஏற்கனவே மெமரி சிப் விலையேற்றம் காரணமாக ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்கள் மொபைல்களின் விலையை உயர்த்தி வருகின்றனர். ஓப்போ, ஒன்பிளஸ், விவோ, நத்திங் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்கனவே தங்கள் ஸ்மார்ட்போன் விலைகளை உயர்த்தியுள்ளன. ஆப்பிள் நிறுவனமும் விரைவில் ஐபோன் விலையை உயர்த்தக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சூழலில் தான் ஸ்ரீதர் வேம்பு கூட தொழில் நடத்துவதே கடினமாகி வருவதாக குறிப்பிட்டுள்ளார். மெமரி விலை உயர்வு குறித்து பேசிய ஸ்ரீதர் வேம்பு, இதன் தாக்கம் சாப்ட்வேர் உருவாக்கும் முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ளார். இதுவரை புரோகிராமிங் லாங்குவேஜ் உருவாக்கப்பட்டபோது, மெமரி என்பது ஒரு விஷயமாகவே இருக்காது.. ஆனால், அந்த காலகட்டம் தற்போது முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
எல்லாம் மாறிடுச்சு
அவர் மேலும், “எனவே, குறைந்த மெமரியை பயன்படுத்தும் திறன் கொண்ட புரோகிராமிங் லாங்குவேஜ், அதிக திறன் வாய்ந்த கம்பைலர்களையும் உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக AI பயன்பாடுகளுக்கும் அதிக மெமரி திறன் தேவைப்படும் நிலையில், மெமரி பயன்பாட்டை குறைக்கும் வகையில் சாப்ட்வேர் மற்றும் கம்பைலர்களை உருவாக்குவது முக்கியம்.
கோட் பாதுகாப்பு மற்றும் புரோகிராமிங் ஆகியவை அதிகப்படியான மெமரி பயன்பாட்டின் விலையாக இருக்கக்கூடாது. குறைந்த மெமரியில் இயங்கக்கூடிய சாப்ட்வேரை உருவாக்குவது தொடர்பாக இனிமேல் கவனம் செலுத்த வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.
டேட்டா சென்டர்
உலகம் முழுவதும் இப்போது ஏஐ பயன்பாடு அதிகரித்து வருவதால், புதிய டேட்டா சென்டர்களை அமைக்கும் பணிகளில் பல்வேறு நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. ஓபன் ஏஐ நிறுவனம் அமெரிக்காவின் ஓஹியோவில் 10 ஜிகாவாட் திறன் கொண்ட டேட்டா சென்டரை அமைக்க சாப்ட்பேங்கின் எஸ்பி எனர்ஜி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்தியாவிலும் டேட்டா சென்டர் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. ஹெச்.சி.எல் டெக் நிறுவனம் டேட்டா சென்டர் துறையில் ரூ.3,500 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. அதேபோல், டிசிஎஸ் நிறுவனம் 1 ஜிகாவாட் திறன் கொண்ட டேட்டா சென்டரை உருவாக்குவதற்காக 7 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


