தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடரில் இன்று, 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், ஒன்று மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம். இது தொடர்பாக முதல்வர் விஜய் தனது அறிவிப்பில், “தமிழ்நாட்டில் இளைஞர்களிடையே மோட்டார் பந்தயங்கள் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, புதிய “மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்” உருவாக்கப்படும். மேலும், ஃபார்முலா 1, ஃபார்முலா 2, ஃபார்முலா 3, மற்றும் ஃபார்முலா 4 உள்ளிட்ட பன்னாட்டுப் பந்தயங்களை நடத்தும் வகையில் சர்வதேசத் தரத்திலான பந்தயத் தடம் மற்றும் பயிற்சி மையங்கள் இங்கு அமைக்கப்படும்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.

முதல்வரின் இந்த அறிவிப்புக்கு நடிகர் அஜித் குமார் நன்றி தெரிவித்திருக்கிறார். இந்தியா டுடே செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில், “மோட்டார் விளையாட்டு உட்பட அனைத்து விளையாட்டுத் துறைகளுக்கும் தேவையான முக்கியத்துவத்தை அளித்து, உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான தமிழ்நாடு அரசின் திட்டங்களை அறிவித்த தமிழ்நாட்டின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்-க்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
தற்போது மோட்டார் விளையாட்டுத் துறையில் ஈடுபட்டிருக்கும் நான், விண்வெளி வீரர் திரு. நீல் ஆம்ஸ்ட்ராங்கின் பொன்மொழியைச் சற்று மாற்றி அமைத்துக் கூற விரும்புகிறேன்: ‘தமிழ்நாடு அரசு எடுத்திருக்கும் இந்த ஒரு சிறு அடி, இந்திய மோட்டார் விளையாட்டுத் துறைக்கு ஒரு மாபெரும் பாய்ச்சல்!’ முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்-யின் அனைத்து முயற்சிகளுக்கும் எனது வாழ்த்துகள்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.