டெல்லியில் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்யக்கோரியும், நீலம் பண்பாட்டு மையம் மற்றும் நீலம் மாணவர் இயக்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை, எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன், பா.ரஞ்சித், நடிகர் மன்சூர் அலிகான், கலையரசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அதில் பேசிய இயக்குநர் அமீர், “நீட் தேர்வு குறித்துப் பேச வந்த பலருக்கு அதைப்பற்றிய தொழில்முறை அறிவு இல்லாவிட்டாலும், “நம் மக்கள் நன்றாக இருக்க வேண்டும்’ என்ற எண்ணமும் சிந்தனையும்தான் அனைவரையும் இங்கு ஒன்று சேர்த்துள்ளது.

அனிதாவின் மரணத்தில் தொடங்கிய அந்த ஓலம் இன்றுவரை ஓயவில்லை. `எங்களிடம் நீட்டைத் தடுப்பதற்கான ரகசியம் இருக்கிறது’ என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்களும் அதைச் செய்யவில்லை. அனிதாவின் வீட்டிற்குச் சென்று ஆறுதல் கூறியவர்களும் அதைத் செய்யவில்லை. நீட் தேர்வுக்கு எதிராக அரசியல்வாதிகள் ஏதேனும் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புவது முற்றிலும் ஏமாற்று வேலை. கோடிக்கணக்கான உறுப்பினர்களும் வாக்குகளும் வைத்துள்ளதாகக் கூறும் எந்தவொரு அரசியல் கட்சியும், இந்த மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக மக்களை அணிதிரட்ட முன்வருவதில்லை. அவர்களுக்கு அரசியல் என்பது வெறும் பிழைப்புவாதமாக மட்டுமே இருக்கிறது.