அதன்பிறகு, பிரதானமாக அதிபர் புதினின் முயற்சியால், 2006-ம் ஆண்டு செப்டம்பரில் நியூயார்க்கில் நடந்த ஐ.நா. கூட்டத்தில் இந்த நான்கு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்து, தங்களுக்குள் பல்வேறு தொடர்புகளை வளர்த்துக்கொள்ள முடிவெடுத்தனர்.
முதலாவது ‘பிரிக்’ உச்சி மாநாடு 2009 ஜூன் மாதம் ரஷ்யாவின் எகதெரின்பர்க் நகரில் நடைபெற்றது. இதில் அப்போதைய இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் கலந்துகொண்டார்.
பின்னர், 2010-ம் ஆண்டு செப்டம்பரில் தென்னாப்பிரிக்கா இணைந்ததைத் தொடர்ந்து ‘பிரிக்’ என்பது ‘பிரிக்ஸ்’ (BRICS) ஆக மாறியது. தொடர்ந்து, 2024-இல் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும், அதற்கு அடுத்த ஆண்டில் இந்தோனேசியாவும் பிரிக்ஸ் அமைப்பில் இணைந்தன.
இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பு ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி முறையில் மாறும். இந்தியா முதன்முதலில் 2012-ம் ஆண்டு மார்ச் 29 அன்று புதுடெல்லியில் இந்த உச்சி மாநாட்டை நடத்தியது.
இந்தக் கூட்டத்தில்தான் ‘பிரிக்ஸ் மேம்பாட்டு வங்கி’ என்ற யோசனையை டாக்டர் மன்மோகன் சிங் முன்வைத்தார்.
இந்த அமைப்பு 2014-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ‘புதிய மேம்பாட்டு வங்கி’ என்ற பெயரில் ஷாங்காயைத் தலைமையகமாகக் கொண்டு உதயமானது.
புகழ்பெற்ற வங்கி அதிகாரியான கே.வி. காமத் இதன் முதல் தலைவராகப் பொறுப்பேற்றார். அதன்பிறகு, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக NDB வங்கியிடமிருந்து இந்தியா இதுவரை சுமார் 10 பில்லியன் டாலர்கள் கடனாகப் பெற்றுள்ளது.”