கர்நாடகாவின் முல்கியில் குடும்பமாக வாழும் சரவணன் (அர்ஜுன் தாஸ்), மித்ரா (அன்னா பென்), ஜாக்கி (யோகி பாபு), ஜானகி (வடிவுக்கரசி) ஆகியோரின் அமைதியான வாழ்க்கையை மீண்டும் எட்டிப்பிடிக்கிறது அவர்களது கடந்த காலம்.
சென்னையின் மங்களாபுரம் பகுதியில் இவர்கள் செய்த மோசடிகளும், அது எப்படி இவர்களை ஒரு குடும்பமாக ஒன்றிணைத்தது, தற்போது கடத்தப்படும் மித்ராவின் மகன் ஜீவாவை (அகிலன்) காப்பாற்ற அவர்கள் மேற்கொள்ளும் கடைசி மோசடி என்ன என்பதையும் சொல்கிறது இந்த ‘கான் சிட்டி’.

சூழ்நிலையின் நிர்பந்தத்தால் மோசடி உலகிற்குள் நுழையும் மனிதர்களின் கதைகள் எப்போதுமே சுவாரஸ்யமானவை. ஒவ்வொருவரின் கடந்த காலத்தையும், அவர்கள் ஏன் இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பதையும் படம் அறிமுகப்படுத்துகிறது.
மின்வாரிய ஊழியரான சரவணன் கடன் தொல்லையால் பெரிதும் அவதிப்படுகிறார். அவரது காதல் வாழ்க்கையே கைகூடாமல் போகும் அளவுக்கு அந்தக் கடன் அவரது வாழ்வைப் புரட்டிப்போடுகிறது. கர்ப்பிணியாக இருக்கும் மித்ரா, குத்தகைக்கு வீடு எடுத்து அதில் ஏமாறுகிறார்.
சினிமா ஹீரோவாக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் ஜாக்கி, தனது தாயாரின் மருத்துவச் செலவுக்காக பணம் திரட்டத் திணறுகிறார். இவர்கள் அனைவரும் எப்படி மோசடி உலகிற்குள் நுழைகிறார்கள், அவர்களின் வாழ்க்கை எப்படி ஒன்றோடொன்று இணைகிறது என்பதை ஜனரஞ்சகமாகச் சொல்ல முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ்.
அர்ஜுன் தாஸ் இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம். சரவணனின் பதற்றம், குற்ற உணர்வு, தன்னம்பிக்கை எனப் பல பரிமாணங்களை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். அன்னா பென் தனது கதாபாத்திரத்தின் அமைதியையும் மனஉறுதியையும் நம்பும்படி திரையில் கொண்டுவந்திருக்கிறார்.
யோகி பாபு, வடிவுக்கரசி இருவரும் தேவையான அளவு நகைச்சுவையைச் சேர்க்கிறார்கள். மாஸ்டர் அகிலனும் தனது கதாபாத்திரத்துக்குத் தேவையான அப்பாவித்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
வில்லனாக வரும் நந்தகோபாலும் கவனம் ஈர்க்கிறார். இவர்களைத் தவிர வி.டி.வி. கணேஷ், ரமேஷ் திலக், இமான் அண்ணாச்சி, பொன்வண்ணன், அருள்தாஸ், ஷாஜி சென், ‘அருவி’ மதன் உள்ளிட்ட பரிச்சயமான முகங்களும் படத்திற்குப் பலம் சேர்க்கிறார்கள்.

தொழில்நுட்ப ரீதியாகவும் ‘கான் சிட்டி’யில் எந்தக் குறையும் இல்லை. அரவிந்த் விஸ்வநாதனின் ஒளிப்பதிவு முல்கியின் இயற்கை அழகையும், மங்களாபுரத்தின் பரபரப்பையும் ஸ்டைலிஷாகப் பதிவு செய்திருக்கிறது. வித்தியாசமான கேமரா நகர்வுகள், ஸ்லோ மோஷன் காட்சிகள் எனக் காட்சியமைப்பில் தனித்துவம் சேர்க்கிறது இவரது கேமரா.
ராஜின் கலை இயக்கத்தில் மின்வாரிய அலுவலகம், உணவகம் உள்ளிட்ட இடங்கள் கதைக்கு நம்பகத்தன்மையை அளிக்கின்றன. இப்படிப்பட்ட திரைப்படங்களுக்கு ஏற்ற இசையைத் தொடர்ந்து வழங்கி வரும் ஷான் ரோல்டனின் பின்னணி இசையும் பாடல்களும் இந்தப் படத்திற்கும் கைகொடுத்துள்ளன. அருள் மோசஸ் ஏ-வின் படத்தொகுப்பு படத்தின் ஓட்டத்தைச் சீராக வைத்திருக்க முயற்சிக்கிறது.
கதாபாத்திரங்களின் அறிமுகம், வித்தியாசமான மோசடிகள் என முதல்பாதி சுவாரஸ்யமாக நகர்கிறது. ஆனால், இடைவேளைக்குப் பிறகு ஜீவாவை மீட்க இந்தக் குழு மேற்கொள்ளும் இறுதி மோசடியைச் சுற்றி திரைக்கதை தடுமாறத் தொடங்குகிறது. ஒவ்வொரு கட்டத்திலும் இவர்களுக்குச் சாதகமாகவே சம்பவங்கள் நடைபெறுவதால் பதைபதைப்பும் எதிர்பார்ப்பும் குறைகின்றன.
பல இடங்களில் ‘என்ன இருந்தாலும் சினிமாதானே’ என்கிற லாஜிக்கைத் தவிர வேறு எந்த லாஜிக்கும் இல்லை. இறுதியில் வரும் சில திருப்பங்கள் ஓரளவுக்கு இரண்டாம் பாதியைக் காப்பாற்றுகின்றன.
சரவணனின் பொருளாதார நெருக்கடி, மித்ராவின் வாழ்க்கைப் போராட்டம் போன்ற காரணங்கள் அவர்களை குற்றப்பாதைக்குத் தள்ளியதாக படம் சொன்னாலும், அவர்கள் மிக எளிதாக திறமையான மோசடிக்காரர்களாக மாறிவிடுகிறார்கள்.
சாதாரண மனிதர்கள் எப்படி இந்த அளவுக்குச் சிக்கலான மோசடிகளைச் செய்யும் திறனைப் பெறுகிறார்கள் என்ற கேள்விக்கு படம் திருப்திகரமான பதிலை வழங்கவில்லை. அதனால், அவர்களுடன் பார்வையாளர்கள் முழுமையாக உணர்வுபூர்வமாக இணைய முடியவில்லை.
இருப்பினும், தேவையற்ற சென்டிமென்ட்டைத் தவிர்த்து இந்தக் குடும்பத்தின் உறவை இயல்பாகக் கையாண்டிருப்பது, மித்ராவின் கடந்த காலத்தை முழுமையாக விளக்காமல் விட்டிருப்பது, சில மோசடிக் காட்சிகளில் காட்டப்படும் புத்திசாலித்தனம் ஆகியவை பாசிட்டிவ் அம்சங்கள்.
திரைக்கதை சறுக்கல்களால் முழுமையான திருப்தியை அளிக்கத் தவறினாலும் சராசரி பொழுதுபோக்குப் படமாக பாஸ் ஆகிறது இந்த ‘கான் சிட்டி’.