ஐபிஎல் 2026-ன் நேற்றைய (ஏப்ரல் 26) விறுவிறுப்பான ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி பெற்றது.
159 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணி, சாய் சுதர்சனின் அதிரடி ஆட்டத்தால் மிக எளிதாக வெற்றியை எட்டியது. இந்த வெற்றிக்குப் பிறகு குஜராத் கேப்டன் சுப்மன் கில் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

வெற்றி குறித்து சுப்மன் கில் பேசியவை, ”உண்மையைச் சொல்லப்போனால், சென்னையில் சிஎஸ்கே அணியை வீழ்த்துவது, எப்போதும் சவாலான ஒன்று. அந்த வகையில் இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
ஆட்டத்தின் கடைசி சில ஓவர்களில் பீல்டிங்கில் சில தவறுகள் நேர்ந்தாலும், பந்துவீச்சாளர்களின் சிறப்பான தொடக்கம் வெற்றியை உறுதி செய்தது.
குறிப்பாக, பவர்-பிளே ஓவர்களில் நாங்கள் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருவது இந்த ஆட்டத்திலும் எங்களுக்குப் பெரும் சாதகமாக அமைந்தது.
ஆட்டத்தின் இடையில் ஷிவம் துபே களமிறங்கியபோது வாஷிங்டன் சுந்தரை ஒரு ஓவர் வீசச் செய்யலாமா என்று யோசித்தோம். ஆனால் ஆட்டம் எங்கள் கட்டுப்பாட்டில் இருந்ததால், ஆட்டத்தை எவ்வளவு ஆழமாகக் கொண்டு செல்ல முடியுமோ அவ்வளவு கொண்டு செல்லத் தீர்மானித்தோம். ரஷித் கானுக்குப் பதிலாக மானவ் சுதாரைப் பந்துவீசச் செய்தது ஒரு திட்டமிட்ட முடிவாகும்” என்றார்.

சாய் சுதர்சனின் ஆட்டம் குறித்துப் பேசுகையில், ”அவர் ஒரு மிகச்சிறந்த வீரர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். அவர் களத்தில் நிலைத்து நின்றுவிட்டால், அதிக ரிஸ்க் எடுக்காமலேயே ரன்களைச் சேர்த்து அணியை வெற்றிபெறச் செய்வார்.
அதுதான் அவரது மிகப்பெரிய பலம். ஒட்டுமொத்தமாகச் சொல்லப்போனால், அணியாக நாங்கள் அனைவரும் இணைந்து செயல்பட்டது இந்த வெற்றியைத் தந்துள்ளது” என்று சுப்மன் கில் பேசினார்.