Delimitation: 'இப்போ 9 சீட்டுகளை தானே இழந்திருப்போம்; ஆனா, 2026-ஐ பார்த்தால்' – பழனிசாமியின் கணக்கு

Spread the love

தொகுதி மறுவரையறை மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் தோல்வியைத் தழுவியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“தமிழ்நாடு தனது அரசியல் அதிகாரத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்பையும், தனக்கு உரிமையான 20 கூடுதல் நாடாளுமன்ற இடங்களையும் இழந்துவிட்டது.

மாண்புமிகு பிரதமர் திரு.மோடி அவர்கள் 50% கூடுதல் இடங்களைப் பெறுவதற்கு வழங்கிய அந்தப் பொன்னான வாய்ப்பை நாம் இழந்தது மட்டுமல்லாமல்.., திரு.ஸ்டாலின் அவர்களே, நீங்கள் ஒரு பொம்மையாக இருந்து கொண்டு, இந்த வாய்ப்பின் சாராம்சத்தைப் புரிந்து கொள்ளாமல் குருட்டுத்தனமாக அதனை எதிர்த்துள்ளீர்கள்.

ஸ்டாலின் - திமுக
ஸ்டாலின் – திமுக

2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டிருந்தால், நாம் 9 நாடாளுமன்ற இடங்களை இழந்திருப்போம். இந்த மசோதாவிற்கு நீங்கள் காட்டிய அறிவற்ற எதிர்ப்பின் காரணமாக, தொகுதி மறுவரையறை இப்போது 2026-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் அமையும். இதனால் நாம் இன்னும் கூடுதலான நாடாளுமன்ற இடங்களை இழக்க நேரிடும்.

மேலும், 1998-ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அவர்களின் தலைமையின் கீழ், மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைக் கொண்டு வந்தார்கள். அந்த நேரத்தில், உங்களது இப்போதைய இந்தியா கூட்டணிக் கூட்டாளிகள்தான் அந்த மசோதா நிறைவேறாமல் பார்த்துக் கொண்டார்கள். இந்த முறை, நீங்களே அந்த மசோதாவை எதிர்த்து அதன் ஆன்மாவைக் கொன்றுவிட்டீர்கள். இதன் மூலம் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் உள்ள பெண்களுக்கும் மிகப்பெரிய அநீதியை இழைத்துள்ளீர்கள்.

திரு.ஸ்டாலின் அவர்களே, நீங்கள் எதைத்தான் கொண்டாடுகிறீர்கள்? தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு நீங்கள் ஏற்படுத்திய பாதிப்பையா அல்லது பெண் முன்னேற்றத்திற்காக கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பை நீங்கள் பாழாக்கியதையா?”

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *