நேபாளத்தின் லாங்டாங் லிருங் (Langtang Lirung) மலையில் அண்மையில் நிகழ்ந்த பாறை மற்றும் பனிச்சரிவு, சில நிமிடங்களில் ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கிய பெருவெள்ளமாக மாறியது. 900-க்கும் மேற்பட்டோரின் உயிரைப் பலிகொண்ட இந்த அதிர்ச்சிகரமான பேரழிவு நிகழ்ந்த தருணம், ட்ரோன் (Drone) கேமராவில் பதிவாகி அனைவரையும் நடுங்க வைத்துள்ளது.
ட்ரோன் கேமராவில் பதிவான நிகழ்வு!
நேபாள–திபெத் எல்லையருகே அமைந்துள்ள லாங்டாங் லிருங் மலையின் வடக்குப் பகுதியில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மலையின் பிரம்மாண்டமான பாறைப் பகுதியும், அதையொட்டிய பனிப்படலமும் திடீரென சரிந்து பள்ளத்தாக்கில் விழுந்தன. சீன எல்லைப் பகுதியில் உள்ள ரேடார் நிலையம் அருகே நின்றிருந்த ட்ரோன் இயக்குநர் ஒருவர், தற்செயலாக இந்தக் காட்சியைப் பதிவு செய்துள்ளார். சில நொடிகளில் பாறைகளும் பனிக்கட்டியும் பாய்ந்தோடுவதும், அதைத் தொடர்ந்து பள்ளத்தாக்கு முழுவதையும் அடர்ந்த தூசிப் படலம் சூழ்ந்து கொள்வதும் வீடியோவில் பதிவாகிப் பயத்தை ஏற்படுத்துகிறது.
நிலநடுக்கமா? பெருந்துயரமா?
ஆரம்பத்தில் இந்தப் பகுதியில் ஏற்பட்ட அதிர்வை வைத்து, இது நிலநடுக்கமாக இருக்கலாம் என்றே பலரும் கருதினர். ஆனால், பின்னர் நடத்தப்பட்ட தீவிர அறிவியல் ஆய்வுகளில்தான் இது நிலநடுக்கம் அல்ல என்பதும், மலையின் பாறைப் பகுதி உடைந்து ஏற்பட்ட மிகப்பெரிய “மாஸ் கொலாப்ஸ்’ (Mass Collapse) என்பதும் தெரியவந்தது.