CNN நியூஸ் 18, JVC நிறுவனங்களின் கணிப்புகள் அதிமுக கூட்டணிக்குச் சாதகமாக இருக்கின்றன. நியூஸ் 18 – 114 முதல் 124 வரையும் JVC 128 முதல் 147 வரையும் அதிமுக கூட்டணி வெல்ல வாய்ப்பிருப்பதாகக் கூறுகின்றன.
ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் மட்டும் விஜய்யின் தவெக ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பிருப்பதாகக் கூறுகின்றன. அவர்களின் முடிவுகளின்படி தவெக 98 முதல் 120 இடங்களையும் திமுக 92 முதல் 110 இடங்களையும் வெல்ல வாய்ப்பிருப்பதாகக் கூறியிருக்கின்றனர். அதிர்ச்சிகரமாக அதிமுகவுக்கு 22-32 வரை மட்டும் தொகுதிகள் கிடைக்கும் என்கின்றனர்.
திமுக+, அதிமுக+, தவெக, நாதக என நான்கு முனைப் போட்டி நிலவினாலும், தீவிரமான போட்டி திமுக, அதிமுக, தவெக இடையில்தான் என்பதே யதார்த்தம். அந்தவகையில் பார்த்தால் பிரதான போட்டியாளர்கள் மூவருக்கும் சாதகமான கருத்துக்கணிப்புகள் வெளியாகியிருக்கின்றன. இதுதான் பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது.
மற்ற எல்லா கருத்துக்கணிப்புகளிலும் தவெகவுக்குக் குறைந்தபட்சம் 1 முதல் அதிகபட்சமாக 40 சீட்டுகள் வரைக்கும் கொடுக்க, ஆக்சிஸ் மை இந்தியா மட்டும் 120 சீட்டுகள் வரை தவெக வெல்லும் எனக் கூறியிருக்கிறது.
இத்தனைப் பாரதூர வேறுபாடுகள் ஏற்படுவதற்கு, வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் எடுக்கும் முறையும் ஒரு காரணம் என்கிறார்கள்.
அதாவது,
ஒரு நாட்டின் அல்லது மாநிலத்தில் ஒட்டுமொத்த பிரதிபலிப்பை ஒரு சிறிய மாதிரியில் கொண்டுவருவதே இதன் முதல் சவால். இதற்காக, “அடுக்கு சீரற்ற மாதிரி தேர்வு’ (Stratified Random Sampling) முறை பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம், நகரம் மற்றும் கிராமப்புற விகிதம், சாதி மற்றும் மதப் பிரதிநிதித்துவம், கடந்த தேர்தல் வரலாறு மற்றும் புவியியல் பரவல் (வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு) என அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய தொகுதிகள் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு தொகுதிக்குள்ளும், குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளை ‘முறைசார் சீரற்ற மாதிரி தேர்வு’ (Systematic Random Sampling) மூலம் தேர்வு செய்வார்கள். இதிலும் கிராமம்/நகரம், சாதி அமைப்பு, கடந்த வாக்குப்பதிவு சதவீதம் போன்ற அளவுகோல்கள் கருத்தில் கொள்ளப்படும்.