அதேசமயம், வேறு சில அரசு ஆவணக் குறிப்புகளில் 126 நபர்கள் உயரமான இடத்திலிருந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டதாகவும், அதில் நீரில் மூழ்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 6 எனவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீர் வழிந்தோடிய அணையின் பின்பக்கத்தில் (தெற்குப் பகுதி) ஒருவர் கூட தவறி விழவில்லை என்பது மிகவும் கவனிக்கத்தக்கது. Spill way எனப்பட்ட நீர் வழிந்தோடிய இடத்திற்கு டிராம்வே மூலமாக மற்றும் கிரேன்களின் உதவியோடும் தேவையான பொருட்களை அணையின் மேல்புறத்துக்கு எடுத்துச் சென்று அணையின் சுவர் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது.
அணையின் இரு பக்கவாட்டுப் பகுதிகள் இதற்காக முழுமையாக இயங்கின. வேலைகள் சரியான அளவில் பிரித்து வழங்கப்பட்டது.
1934-ல் வெள்ளம் வருவதற்கு முன்பாக ஸ்பில்வே பகுதி முழுமையாக கட்டி மூடப்பட்டது. அதுவரை அணையின் நீர்மட்டம் +774 MSL என்ற அளவிற்கு மிகாமல் இருந்தது பாதுகாப்பாகவும் அமைந்தது.
பல தொழிலாளர்கள் விபத்தில் சிக்கி, சில தொழிலாளர்கள் தங்களின் இன்னுயிரை தியாகம் செய்து கட்டி எழுப்பப்பட்ட உயிர் நாடி இந்த மேட்டூர் அணை என்பதை எவர் ஒருவரும் மறந்துவிடலாகாது.
காவிரி நீரில் இவ்வாறு தியாகம் செய்த உயிர்களின் ஜீவனும் அடங்கியுள்ளதால், தமிழக மக்கள் இந்த மக்களுக்கு நன்றி செலுத்த கடமைப் பட்டவர்கள்!
வாசகர்கள் எளிதில் உணர்ந்து கொள்ள சில புள்ளி விவரங்கள் உதவும்.
தமிழ்நாட்டில் காவிரி நீர் பாசன அளவு:
1. காவிரி டெல்டா பாசன அமைப்பு – தொன்மையானது – 12.47 லட்சம் ஏக்கர்
2. காவிரி மேட்டூர் திட்டம் – 1934ல் ஏற்படுத்தியதன் மூலம் – 3.23 லட்சம் ஏக்கர்
3. மேட்டூர் கால்வாய் திட்டம் – 1957-ல் விரிவு படுத்தியதன் மூலம் – 0.45 லட்சம் ஏக்கர்.
ஆக மொத்தம் 16.15 லட்சம் ஏக்கர் நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெறுவதோடு, தமிழ்நாட்டில் மொத்தமாக 25 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது என்கிறது ஓர் தரவு.
தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த நீர்த்தேவையில் சுமார் 35 விழுக்காடை காவிரி நீர் பூர்த்தி செய்கிறது. கால்வாய் பாசன வசதிகளில் 75 விழுக்காடு, காவிரி படுகையின் 8 மாவட்டங்களில் அமையப்பெற்றுள்ளது.