.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 37 வயது பெண்ணை த.வெ.க நிர்வாகியான பாலமுருகன் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் சர்சையாகியுள்ளது. அந்தப் பெண்ணுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி தனியார் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று, ஜூஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டனர். இருப்பினும், குற்றவாளிகளுக்கு உடந்தையாகச் செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சரவணன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட பெண் நெல்லை சரக டி.ஐ.ஜி-யிடம் இன்று (ஜூன் 13-ம் தேதி) புகார் அளித்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்க பேசிய பாதிக்கப்பட்ட பெண், “நான் விஜய் சாரின் தீவிர ரசிகை. அவர் திரைப்படங்களை ஒன்று விடாமல் பார்த்து விடுவேன். அவர் அரசியல் கட்சி கொடங்கியதும் நானும் அவரது கட்சியில் சேர்ந்தேன். பின்னர் தேர்தலின் போதும் நான் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிட்ட சரவணனுக்காக தீவிரமாக வாக்கு சேகரித்தேன். அப்போது எனக்கு த.வெ.க நிர்வாகியாக இருந்த பாலமுருகனுடன் கட்சி ரீதியானபழக்கம் ஏற்பட்டது. அவர் மூலமாக ஜெயபாலும் அறிமுகமானார்.
எனக்கு திருமணமாகி விட்டது. நான் குடும்பத் தேவைக்காக நல்ல வேலை தேடி வந்தேன். இது தொடர்பாக அறிமுகமான பலரிடமும் வேலை தேடித் தருமாறு சொல்லியிருக்கிறேன். அதன்படி பாலமுருகனிடம் பேசியபோது, எம்.எல்.ஏ சரவணன் செய்துவரும் லாட்டரி தொழிலில் வேலை இருப்பதாகவும், நல்ல கமிஷன் கிடைக்கும் என்றும் அழைத்துச் சென்றார். ராமநாதபுரத்தில் ஏஜென்ட்டாக இருக்கும் ஜெயபாலை பார்க்க வேண்டும் என பாலமுருகன் என்னை காரில் அழைத்துச் சென்றார்.