ஹரியானா மாநிலம் குருஷேத்ராவை சேர்ந்தவர் பல்வந்த் சிங் வாலியா. மூத்த வழக்கறிஞரான பல்வந்த் சிங் இரவு 9 மணிக்கு தனது நாயை நடைபயிற்சிக்கு வெளியில் அழைத்து சென்றார். வீட்டில் அவரது மனைவி மட்டும் இருந்தார். இரவு 10 மணியளவில் அவர் திரும்பி வந்தபோது, வீடு கலைந்து போயிருந்தது. அவரது மனைவி படுக்கையில் கைகளும் கால்களும் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில், வாய் நாடாவால் மூடப்பட்டு, குப்புறக் கிடந்ததைக் கண்டார். வீட்டில் இருந்த முகமூடி அணிந்த நான்கு பேர் வழக்கறிஞரையும் தாக்கி கட்டிப்போட்டனர். அத்துடன், முதிய தம்பதியரைத் தாக்கி, துப்பாக்கி முனையில் அவர்களை மிரட்டி பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களைக் கேட்டுப் பறித்தனர்.
அதோடு கடந்த மார்ச் 20ஆம் தேதி இதே வீட்டில் ரூ.50 லட்சம் கொள்ளையடித்தது தாங்கள்தான் என்று கொள்ளையர்கள் தம்பதியிடம் கூறினர். அந்தச் சமயத்தில் டிஜிட்டல் பெட்டகத்தைத் திறக்க முடியாமல் போய்விட்டதாகவும், இப்போது அந்த லாக்கர்களைத் திறக்கும்படி மிரட்டினர். திறக்க மறுத்தால் இருவரையும் சுட்டுக் கொன்றுவிடுவோம் என்று துப்பாக்கியால் மிரட்டினர்.
தங்கள் உயிருக்கு அஞ்சி, வழக்கறிஞர் லாக்கர் சாவிகளை ஒப்படைத்தனர். அதன் மூலம் இரண்டு டிஜிட்டல் லாக்கர்களையும் திறந்து 17 முதல் 20 லட்சம் ரூபாய் ரொக்கம், 1.5 முதல் 2 கிலோ தங்க நகைகள், சுமார் 4 கிலோ வெள்ளி நகைகள், பாத்திரங்கள் மற்றும் சிலைகள், உரிமம் பெற்ற கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களுடன் கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர்.
அங்கிருந்து தப்பிச்செல்வதற்கு முன்பு, அவர்கள் நான்கு சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்திவிட்டு ஆதாரங்களை அழிப்பதற்காக டிவிஆரை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. கொள்ளையர்கள் மேலும் ரூ. 80 லட்சம் கொடுக்கும்படி கேட்டனர், தாங்கள் அதனை வாங்க திரும்பி வருவோம் என்றும் தயார் செய்து வைக்கும்படி எச்சரித்ததனர். இந்த விஷயத்தை போலீசில் தெரிவித்தால், தம்பதியைக் கொன்று விடுவதாக மிரட்டிவிட்டு சென்றனர். அவர்கள் வெளிப்புறமாக கதவை பூட்டிவிட்டு சென்றனர்.
முதிய தம்பதி உதவி கேட்டு கத்தியை தொடர்ந்து பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து அவர்களை மீட்டனர். அதன் பிறகு இது குறித்து வாலியா போலீஸில் புகார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். அதோடு வழக்கறிஞர் வாலியா வீட்டிற்கு பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.