தனது அப்பாவி முகபாவனையை வைத்துக்கொண்டு ‘பரிதாபங்கள்’ சுதாகர் அடிக்கும் ஒன்லைனர்கள் நம்மைச் சத்தத்துடன் ‘ஹாஹா’ போட வைக்கின்றன. இது நல்லா இருக்கு சுதாகர்! இவர்களைத் தாண்டி தமன், நிஹாரிகா, ‘பரிதாபங்கள்’ டிராவிட், ரக்ஷன், ஏஞ்சலின், நட்டி எனப் பெரும் பட்டாளம் இதயாவின் காதலைக் கரை சேர்க்க உதவியிருக்கிறது. இவர்களுடன், ஒரு டஜன் கேமியோக்கள் படம் நெடுக வருகின்றன. ஆனால், இத்தனை சிறப்புத் தோற்றங்கள் இந்தக் கதைக்கு அவசியமா இயக்குநரே?!

திருச்சியின் பானி பூரி கடை தொடங்கி நியூயார்க்கின் புரூக்ளின் பாலம் வரை பயணித்துப் படம்பிடித்திருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர்கள் மனோஜ் பரமஹம்சா மற்றும் சி.எச். சாய். அவர்களின் வண்ணமயமான மார்டன் ‘டச்’சும் படத்தின் மேக்கிங்கிற்குப் பலம் சேர்க்கிறது. ஆனால், ஒரு சில இடங்களில் வரும் ‘அவுட் ஆஃப் ஃபோகஸ்’ ஷாட்கள் மட்டும் லேசான துருத்தல்! முதல் 30 நிமிடத்திற்குப் பிறகு காட்சிகள் பயணிக்கும் விதம் பற்றிக் கண்டும் காணாமல் விட்டிருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ. ராகவ். அதன் பிறகு இரண்டாம் பாதியில்தான் கடிவாளத்தை மீண்டும் கையில் பிடித்திருக்கிறார்.
பாடல்களில் ‘கட்டழகி’, ‘வாமா வாமா’, ‘தங்கமே தங்கமே’, ‘இதயா’ என தமனின் பீட்களும், மெலடியும் தியேட்டர்களில் அதிரடி கொண்டாட்டம்! ஆனால், இதில் சில பாடல்கள், காட்சிகளைக் குறுக்கிடும் வேகத்தடைகளே! எமோஷன், கொண்டாட்டம், காதல் என அனைத்தும் பொங்கி வரும் பின்னணி இசையும் நச்! ‘இதயமே’ என்ற ‘பாதி’ ரீமிக்ஸும், ‘பொட்டு வைத்த’ பாடலின் அசல் வெர்ஷனும் பயன்படுத்தப்பட்ட விதம் நன்று!