இருபது ஓவர் கிரிக்கெட் என்றால் இனி இந்திய அணி மட்டும்தான் என்று சொன்ன ரசிகர்களின் தலையில் எல்லாம் இப்போது துண்டைப் போட்டு அமர வைத்துள்ளது, அயர்லாந்து கிரிக்கெட் அணி.
“உலக சாம்பியனுக்கு வந்த நிலைமையா இது?” என்கிற குமுறல் சமூக வலைதளங்கள் முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடர் அயர்லாந்தில் நடைபெற்றது. இந்தத் தொடரில் பல மாற்றங்களுடன் களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயர் நியமிக்கப்பட்டார். ஆனால், இந்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவிய இந்திய அணி, தொடரை இழந்துள்ளது.
ஐபிஎல்-ல் ஆடிய அதே வேகத்துடன் அயர்லாந்து சென்ற இந்திய வீரர்களுக்கு சிறந்த பாடத்தைக் கற்றுக் கொடுத்தது அயர்லாந்து மைதானம். எந்தப் பந்து வீசினாலும் சிக்ஸர்களும் பவுண்டரிகளும் அடிக்க வேண்டும் என்ற மனப்பான்மையைச் சுக்குநூறாக உடைத்தெறிந்துள்ளது அயர்லாந்து அணி.
ஐபிஎல் பிட்ச்களுக்கும் வெளிநாட்டு மைதானங்களுக்கும் இருக்கும் வித்தியாசம் இதுதான். பவர் பிளேவிற்குள்ளேயே அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை இழந்து, “டீசன்ட்டான ஸ்கோர் சேர்ப்போம்’ என்பதுதான் இந்தத் தொடரில் இந்தியாவின் பாணியாக இருந்தது.
ரோஹித் சர்மாவின் அந்த நிதானமான கேப்டன்ஷிப்பும், விராட் கோலியின் நிலைத்து ஆடும் ஆட்டமும் இந்த அணியில் எவ்வளவு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை இந்தத் தொடரின் ஒவ்வொரு போட்டியும் நமக்குக் காட்டியது.
விக்கெட்டுகள் அடுத்தடுத்துச் சரிந்து விழும்போது, பதற்றப்படாமல் ஆட்டத்தை அப்படியே ஹோல்ட் செய்து, பார்ட்னர்ஷிப் அமைக்கும் திறன் எந்த ஒரு இளம் வீரரிடமும் கடுகளவும் தென்படவில்லை.