சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார்.
நடிகர்களின் நேர்த்தியான பங்களிப்பால், திரைப்படத்தின் பல எமோஷனல் காட்சிகள் பார்வையாளர்களிடையே ஆழமான தாக்கத்தை உண்டாக்கி ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறார்கள்.

இப்படத்தில் ‘புதுகை பூபாளம்’ பிரகதீஸ்வரனும் நல்லதொரு நடிப்பை வழங்கியிருக்கிறார். பிரகதீஸ்வரனும் அவருடைய நய்யாண்டி காமெடிகளும் அவ்வளவு பரிச்சயம்!
அரசியல் மற்றும் நடப்பு நிகழ்வுகளில் இருக்கும் தவறுகளை இவருடைய நய்யாண்டி சுட்டிக் காட்ட என்றும் தவறியதில்லை. ‘கருப்பு’ படத்திற்கு வாழ்த்துகள் சொல்லி அவரைப் பேட்டி கண்டோம்.
நம்மிடையே பேசியவர், “‘கருப்பு’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைச்சிட்டு இருக்கு. முதலிலேயே, ‘உங்களுக்கு மூணு சீன்தான் இருக்கும். ஆனா, அது அழுத்தமானதாக இருக்கும்’னு ஆர்.ஜே.பாலாஜி சார் சொன்னார்.
அதுபோலவே, இப்போ நடந்திருக்கும். ‘டாணாக்காரன்’ படத்துக்குப் பிறகு, இந்தப் படத்தின் மூலமா இன்னொரு அழுத்தம் மிகுந்த கேரக்டர் கிடைச்சது.
ரொம்பவே நிறைவான உணர்வாகத்தான் இருக்கு. இன்னைக்குக் காலையில வாக்கிங் போகும்போதுகூட ஒருத்தவங்க, ‘நேர்ல வயது குறைந்தவர் மாதிரி இருக்கீங்க. ஆனால், படத்துல வேற மாதிரி இருக்கீங்க’னு வித்தியாசத்தைப் பார்த்து சொன்னாங்க. படத்துக்கு, கதாபாத்திரத்தின் தோற்றத்திற்குத் தேவையானதை நான் செய்தேன்.

அதுக்கு இப்படியான பாராட்டு கிடைக்கிறது ரொம்ப நெகிழ்வாக இருக்கு. ‘டாணாக்காரன்’ல என்னுடைய கதாபாத்திரத்தைப் பார்த்துட்டு, டைரக்ஷன் டீம்ல இருக்கிறவங்க இயக்குநர்கிட்ட என்னைப் பற்றி சொல்லியிருக்காங்க.
பிறகு என்னுடைய சீன்ஸ் சிலவற்றையும் இயக்குநர் பார்த்திருக்கார். அப்புறம்தான் நான் ‘கருப்பு’க்குள்ள வந்தேன். ‘உண்மையாகவே அந்தக் கேரக்டருக்குப் பொருந்தி போகணும். அதனாலதான் உங்களைத் தேர்வு பண்ணியிருக்கோம்’னாாங்க. என்னை நம்பிக் கொடுத்தாங்க. அதுக்காக நான் உழைச்சிருக்கேன்!” என்றார் நம்பிக்கையுடன்.
“நீதி மறுக்கப்பட்ட ஒருவன் என்பதுதான் படத்துல என்னுடைய கதாபாத்திரம். இது போன்றதொரு சம்பவம் வடமாநிலத்துல நடந்திருக்கிறதாகவும் சொன்னாங்க. நீதிமன்றத்துக்குள்ள நடக்கிற சில ஊழல் விஷயங்களையும் இந்தப் படம் பேசியிருக்கும்.
நான் என்னுடைய நிகழ்வுகள்ல நீதிமன்றத்துக்குள்ள நடக்கிற ஊழல் விஷயங்களை நையாண்டி பண்ணிருக்கேன்.
நீதிபதி அமர்ந்து எங்க நிகழ்வைப் பார்க்கும்போதே, நாங்க இதைச் செய்திருக்கோம். ஆனா, அதே சமயம் மற்றொரு பக்கம் நியாயம் தவறாத நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் இருக்காங்க.” என்றவர், “‘கருப்பு’ படத்துல, தான் உயிருடன் இருக்கும்போதே சொத்துகளுக்காக இறந்துவிட்டதாக சான்றிதழ் தந்துவிட்டதை எதிர்த்துப் போராடும் கேரக்டர்ல நான் நடிச்சிருக்கேன்.

எப்போதுமே, ஒவ்வொரு கேரக்டரை ஏற்று நடிக்கும்போதும், அதுக்குள்ள பயணம் பண்ணினால்தான் அந்த நடிப்பைக் கொண்டு வர முடியும். எனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தின் மனவோட்டம் ரொம்பவே வலி மிகுந்தது. ‘கல்லூரி’ படத்துல க்ளைமேக்ஸ்ல மட்டும் நான் நடிச்சிருப்பேன். ‘அந்தச் சம்பவத்தை நினைச்சு நடிங்க’னு பாலாஜி சக்திவேல் சார் சொன்னார்.
அப்படி அந்தக் காட்சியில நான் உண்மையாகவே அழுதுருப்பேன். எப்போதுமே ஒரு சமூகப் பொறுப்போடு இருக்கிற என்னை மாதிரி ஒருவனுக்கு, சுற்றி நடக்கக்கூடிய இது போன்ற சம்பவங்கள் பாதிப்பை உண்டாக்கும். அதை உணர்ந்துதான் நடிப்புல கொண்டு வர்றோம். அது மக்களுக்குக் கனெக்ட் ஆகுது.” என்றார்.
படக்குழுவினருடனான அனுபவங்கள் பற்றி, “எனக்கும் இந்திரன்ஸ் சாருக்கும் படத்துல முக்கியமான சில காட்சிகள் இருக்கு. அவருக்கு எவ்வளவு பெரிய நடிகர்ங்கிறது எனக்குத் தெரியும்.
முதல்ல நாங்க பெரியளவுல பேசிக்கல. எங்களுக்கு இடையிலான ஒரு அழுத்தமான காட்சியை முடித்த பிறகு அவராகவே மலையாளத்துல ‘நீங்க தியேட்டர் ஆர்டிஸ்டோ’னு கேட்டார். ‘நல்லா நடிக்கிறீங்க’னு பாராட்டும் கொடுத்தார்.
பிறகு நாங்க நண்பர்களாகிட்டோம். படம் ரிலீஸ்ல ஒரு நாள் தாமதமானபோதுகூட, எனக்கு அவர் போன் பண்ணி நிலவரத்தை விசாரிச்சார். இதுமட்டுமில்ல, மலையாள படங்களுக்கும் என்னை பரிந்துரைக்கிறேன்னு சொல்லியிருக்கார். சூர்யா சாருடைய அசிஸ்டண்ட் ‘உங்களுடைய நிகழ்வுகளை சூர்யா சார் பார்த்திருக்கார்’னு சொல்லியிருக்காங்க.

பிறகு, சூர்யா சாரும் ‘ரொம்ப நல்லா பண்றீங்க. எப்படி அவ்வளவு நேரம் மேடையில நின்னு பேசுறீங்க’னு என்னுடைய நிகழ்வுகள் தொடர்பாக என்கிட்ட பேசினார். ‘நீங்க பேசுறதுனால எதுவும் எதிர்ப்புகள் இல்லையா’னு கேட்டார்.
நான் ‘வரும் சார்’னு சிரிச்சுகிட்டே சொன்னேன்.” என்றவரிடம், “‘படத்தில் நீங்கள் பேசும் வசனத்திற்கு விசில் பறந்ததே!” என்றதும் சிரித்துக்கொண்டே, “ஆமா, ‘இவங்க என் தலையில மிளகாய் அரைச்சது பத்தாதா, நான் கருப்பசாமி மேல வேற அரைக்கணுமா’னு பேசுற வசனத்துக்குப் படத்துல க்ளாப்ஸ் வந்துச்சு.
சொல்லப்போனால், அந்த இடத்துல வேறொரு வசனம்தான் இருந்தது. சென்சார்லதான் இந்த வசனம் வந்தது. அதுபோல, ‘கருப்பனும் என்னை மாதிரி இங்க கேஸ் நடத்த வந்தவன்தான்’ என்கிற வசனத்துக்கும் நல்ல க்ளாப்ஸ் வந்தது.” என உற்சாகமடைந்தார்.
“தொடர்ந்து அரசியல் நடப்புகளை நய்யாண்டி செய்து வருகிறீர்கள். உங்களுக்கென ஒரு அரசியல் நிலைப்பாடு இருக்கும். நீங்கள் நடிக்கும் படங்கள் அந்த நிலைப்பாட்டை மீறினால், அதில் நீங்கள் நடிப்பீர்களா? உங்களுடைய முடிவு என்னவாக இருக்கும்?” எனக் கேட்டதற்கு, “இல்லைங்க, இந்த இடத்துல நான் நடிகனாகத்தான் வந்திருக்கேன்.
என்னுடைய அரசியல் நிலைப்பாடு என்பது வேறு. இங்க நான் நடிக்கிறதுக்குத்தான் வந்திருக்கேன். இங்க நான் என்னை நடிப்பிற்கும் அந்தக் கதாபாத்திரத்திற்கும் ஒப்புக்கொடுக்கணும்.
அந்த இடத்துல நடிகராக அதைப் பார்க்கக்கூடாதுனு நான் நினைக்கிறேன். என்னை பற்றியும், நான் பேசுற விஷயங்கள் பற்றியும் தெரிந்த இயக்குநர்கள் இங்கிருக்காங்க.

அப்படி இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி என்னை வாங்க கம்யூனிஸ்ட்னுதான் கூப்பிடுவார்.” என்றவர், “நான் பல மேடைகள்ல செய்யுற நிகழ்வுகள் என்னுடைய வாய்ப்புகளுக்குத் தடையாகவும் இருந்திருக்கு.
ரொம்ப காலத்துக்குப் பிறகு நான் சினிமாவுக்குள்ள வர்றதுக்கு அதுவும் ஒரு காரணம்தான். நிறைய பேர் நடிக்க வைக்கிறேன்னு சொல்லியிருக்காங்க. ஆனா, ‘டாணாக்காரன்’லதான் எனக்கான வாய்ப்பு வந்து அமைஞ்சிருக்கு.
இப்போ அடுத்தடுத்து படங்கள் பண்ணிட்டு இருக்கோம். ‘மார்ஷல்’, ‘காவியக் காதல்’ உள்ளிட்ட சில படங்கள்ல நடிச்சிட்டு வர்றேன்” என முடித்தார்.