India
oi-Vishnupriya R
திருச்சூர்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 7 கல்லூரி மாணவர்களும் டிரைவரும் இறந்த சம்பவத்தில் விபத்து எப்படி நடந்தது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
திண்டுக்கல்லில் தனியார் பொறியியல் கல்லூரியை சேர்ந்த 7 மாணவர்களும் வாடகை வாகனத்தில் டிரைவரை அமர்த்திக் கொண்டு கேரளாவுக்கு சுற்றுலா சென்றனர்.

அவர்கள் பயணித்த கார் குருவாயூரில் இருந்து கொடுங்கல்லூர் நோக்கி சென்றது. அப்போது அதே திசையில் ஒரு லாரி நிறுத்தப்பட்டிருந்தது. அங்கு சாலை பணியும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக அந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து பணம்பிக்குன்னு என்ற இடத்தில் நடந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 7 மாணவர்களும் கார் ஓட்டுநரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தில் சிக்கிய மாணவர்களின் உடல்கள் உடல் கூறாய்விற்காக திருச்சூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் ஒருவரது கல்லூரி அடையாள அட்டை கிடைத்தது. அதை வைத்துதான் 7 பேரும் திண்டுக்கல் பொறியியல் கல்லூரி மாணவர்கல் என்பது தெரியவந்தது.
இந்த விபத்தில் சிக்கிய கார் அப்பளம் போல் நொறுங்கிவிட்டது. விபத்து நேற்று இரவு 11.45 மணிக்கு நடந்தது. இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர், உள்ளூர் மக்கள், தீயணைப்புத் துறையினர் கடுமையாக போராடி அந்த நொறுங்கிய வாகனத்தில் இருந்து உடல்களை மீட்டனர்.
விபத்திற்கான காரணம் குறித்து போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் சில விஷயங்கள் தெரியவந்துள்ளது. அதாவது சாலை பணிகள் நடந்து வருவது குறித்தும் சாலை முடிகிறது, சாலை திருப்பம் குறித்தும் எந்த எச்சரிக்கை பலகையும் வைக்கப்படவில்லை என்கிறார்கள்.
மேலும் போதிய வெளிச்சம் இல்லாத அந்த பகுதியில் லாரிகளை நிற்க வைத்துள்ளனர். மேலும் எச்சரிக்கை பலகை வைத்திருந்தால் அந்த கார் தனது வேகத்தை குறைத்திருக்கும், விபத்தும் நிகழ்ந்திருக்காது.
ஆனால் சாலை இருப்பதாக கருதி அதே வேகத்தில் பயணித்ததால் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது என்கிறார்கள்.