மாரி செல்வராஜ் தன்னுடைய 6-வது படத்திற்கான பணிகளைத் தொடங்கிவிட்டார். துருவ் விக்ரம், அனுபமா, ரஜிஷா விஜயன் ஆகியோரை வைத்து மாரி செல்வராஜ் இயக்கியிருந்த ‘பைசன் காளமாடன்’ திரைப்படம், கடந்தாண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வந்து நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
‘கர்ணன்’ திரைப்படம் வெளியாகி ஓராண்டை நிறைவு செய்தபோதே, தனுஷை வைத்து மாரி செல்வராஜ் இயக்கும் மற்றுமொரு படத்தின் அறிவிப்பு வெளியாகியிருந்தது. மிகுந்த பொருட்செலவில் பெரிய திரைப்படமாக அது உருவாகும் எனக் கூறப்பட்டது.

‘பைசன் காளமாடன்’ திரைப்படத்திற்குப் பிறகு தனுஷ் படத்தை மாரி செல்வராஜ் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ‘பைசன் காளமாடன்’ படத்தின் ப்ரோமோஷன் வேளையிலும், அடுத்ததாக தனுஷ் படத்தை இயக்குவதாக மாரி செல்வராஜும் உறுதிப்படுத்தியிருந்தார். இந்நிலையில், மாரி செல்வராஜின் 6-வது திரைப்படம் பற்றிய அறிவிப்பு வந்திருக்கிறது.
இப்படத்திற்கு ‘மஞ்சணத்தி’ எனத் தலைப்பிடப்பட்டிருக்கிறது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கவிருக்கிறார். இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றுவது பற்றி ஒரு சிறப்பு காணொளியும் படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.
இத்திரைப்படத்தின் அறிவிப்பு பற்றிய பதிவில் மாரி செல்வராஜ், ”அந்த உன்னதமான தருணம் இறுதியாக நிகழ்ந்துவிட்டது” எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.

மாரி செல்வராஜின் ‘நவ்வி ஸ்டுடியோஸ்’ இப்படத்தைத் தயாரிக்கிறது. ‘நவ்வி ஸ்டுடியோஸ்’ சார்பாக மாரி செல்வராஜின் மனைவி திவ்யா இப்படத்தைத் தயாரிக்கிறார். படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் பற்றிய அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் எனக் கூறப்படுகிறது.