சென்னை எண்ணூர் அருகே கொசஸ்தலையாறு மற்றும் எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் டன் கணக்கில் மீன்கள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்கள் செத்து கரை ஒதுங்கி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 6 முதல் 7 கிலோமீட்டர் தொலைவுக்கு இறந்த மீன்கள் காணப்படுவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
பக்கிங்ஹாம் கால்வாய் அருகே காட்டுக்குப்பம் பகுதியில் இருந்து வடசென்னை அனல் மின் நிலையத்தை கடந்து மீன்கள் செத்து மிதப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக ரயில்வே பாலம் அருகே வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் மீன்கள் கூட்டமாக ஒதுங்கியதை மீனவர்கள் முதலில் கவனித்துள்ளனர். மாலை நேரத்தில் பல்வேறு நீர்வழிப் பகுதிகளிலும் இதேபோன்ற நிலை காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்ப மாசு காரணமா?
மீன்கள் உயிரிழந்ததற்கு தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் மாசுபட்ட கழிவுநீர் காரணமாக இருக்கலாம் என மீனவர்களும், Save Ennore Creek அமைப்பினரும் குற்றம்சாட்டியுள்ளனர். குறிப்பாக பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக வரும் தொழிற்சாலை கழிவுகள் ஆற்றில் கலப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
இதனிடையே, ஆகஸ்ட் 9ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட நீரின் வெப்பநிலை ஆய்வில் NTECL வல்லூர் நிறுவனத்தின் கழிவுநீர் வெளியேற்றும் இடத்திற்கு அருகே 40.8°C மற்றும் 40.6°C என்ற அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மீன்கள் உயிரிழப்புக்கு வெப்ப மாசும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.