கடந்த ஆண்டு நவம்பர் 10-ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. அதில் 11 பேர் பலியான நிலையில், 29 பேர் காயமடைந்தனர். இந்தக் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், NIA தாக்கல் செய்திருக்கும் குற்றப்பத்திரிக்கையில், “கடந்த ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதி, வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஹூண்டாய் i20 காரில் உமர் என்பவர் சென்றிருக்கிறார். மாலை 6.37 மணியளவில் அவர் லால் மந்திர் அருகே காரை நிறுத்த முயன்றிருக்கிறார். அப்போது அந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் இருந்திருக்கிறது.
இது பகுதியில் பதிவான சிசிடிவி கேமராவின் மூலம் தெரியவந்தது. மேலும், அங்கு காவல்துறைப் பாதுகாப்பும் அதிகமாக இருந்ததால், காரைத் திட்டமிட்டபடி அங்கு நிறுத்த முடியாமல் திரும்பியவர், பின்னர் காரை செங்கோட்டை நோக்கி ஓட்டிச் சென்றுள்ளார்.
சில நிமிடங்களுக்குப் பிறகு, செங்கோட்டையின் 4-வது நுழைவுவாயில் அருகே காரை நிறுத்தியிருக்கிறார். மாலை 6.50 மணியளவில் குண்டு வெடித்தது. கார் குண்டுவெடிப்பை நடத்துவதற்காக சிறப்பு முறையில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டிருக்கிறது.