India
oi-Vignesh Selvaraj
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன. வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ஜெய்ப்பூர், உதய்பூர், ஜோத்பூர், பில்வாரா, கோட்டா, அல்வார், அஜ்மீர் மற்றும் பிகானேர் உட்பட ராஜஸ்தான் முழுவதும் உள்ள 8 மாநகராட்சிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது.
ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு செப்டம்பர் 9 மற்றும் 11 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்டத்தில் 76.42% வாக்குப்பதிவும், இரண்டாம் கட்டத்தில் 70.68% வாக்குப்பதிவும் பதிவானது. இந்தத் தேர்தலில் சராசரியாக 73 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

இதில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 10 மாநகராட்சிகள், 47 நகராட்சி மன்றங்கள், 252 நகராட்சிகள் உட்பட 309 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்து. இதில் 1.44 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். இவர்கள் 10,245 கவுன்சிலர்களை தேர்வு செய்வார்கள்.
ராஜஸ்தான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில், மொத்தமுள்ள 10 மாநகராட்சிகளில் 8ல் பாஜக முன்னிலை வகிக்கிறது. பாலி மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. பரத்பூரில் ஒரு சுயேச்சை வேட்பாளர் முன்னிலை வகிக்கிறார்.
47 நகராட்சி மன்றங்களில், இதுவரை 27 மன்றங்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன, இதில் பாஜக 15 நகராட்சி மன்றங்களில் வெற்றி பெற்றுள்ளது. 8 நகராட்சி மன்றங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. பல நகராட்சி பகுதிகளிலும் பாஜக மற்றும் சுயேச்சைகள் முன்னிலை வகிக்கின்றனர். தற்போது ஆளும் கட்சியான பாஜக 200-க்கும் மேற்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் முன்னிலை வகிக்கிறது.
ஜெய்ப்பூர் மாநகராட்சியில் உள்ள 150 வார்டுகளில் 28 வார்டுகளுக்கான முடிவுகள் தற்போது வரை அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், பாஜக 20 வார்டுகளையும், காங்கிரஸ் 7 வார்டுகளையும், ஒரு சுயேச்சை வேட்பாளர் ஒரு வார்டையும் வென்றுள்ளனர்.
ராஜஸ்தானின் 10,245 வார்டுகளை உள்ளடக்கிய 309 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், பாஜக 1,248 வார்டுகளிலும், காங்கிரஸ் 1,065 வார்டுகளிலும் முன்னிலை வகிக்கின்றன. சுயேச்சைகள் 610 வார்டுகளில் முன்னிலை வகிக்கின்றனர். அதேவேளையில், ஆர்எல்பி 30 வார்டுகளிலும், பிஏபி மற்றும் சிபிஐ(எம்) தலா ஐந்து வார்டுகளிலும், பிஎஸ்பி நான்கு வார்டுகளிலும், ஆம் ஆத்மி கட்சி ஒரு வார்டிலும் முன்னிலை வகிக்கின்றன.