Self Attendance: `இனி குழந்தைகள் பிரசென்ட் சொல்ல வேண்டாம்!' – ஆசிரியையின் ஐடியா; இணையத்தில் வைரல்!

Spread the love

தொடக்கப்பள்ளி மாணவர்களின் வருகைப் பதிவை சுவாரஸ்யமான கற்றல் அனுபவமாக மாற்றியுள்ள டெல்லியைச் சேர்ந்த ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியையின் புதுமையான முயற்சி சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

வழக்கமாக ஆசிரியர் மாணவர்களின் பெயர்களை அழைத்து, அவர்கள் “பிரசென்ட்” என்று பதிலளிக்கும் முறைக்குப் பதிலாக, மாணவர்கள் தங்களது வருகையைத் தாங்களே பதிவு செய்யும் வகையில் கையால் தயாரிக்கப்பட்ட வருகைப் பலகையை அந்த ஆசிரியர் உருவாக்கியுள்ளார்.

எளிய மற்றும் குறைந்த செலவிலான பொருள்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பலகையில், ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியாக சிறிய தீப்பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன. அந்தத் தீப்பெட்டிகளின் மீது மாணவர்களின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டிருப்பதால், சிறுவர்கள் தங்களுக்கான பெட்டியை எளிதில் அடையாளம் காண முடிகிறது. ஒவ்வொரு பெட்டியிலும் “P” (Present) மற்றும் “A” (Absent) என்ற இரண்டு குறியீடுகள் இடம்பெற்றுள்ளன. பள்ளிக்கு வந்தவுடன் மாணவர்கள் தங்களது தீப்பெட்டியை நகர்த்தி “P” என்ற குறியீட்டைக் காட்டி, பின்னர் வகுப்பறைக்குள் சென்று அமருகின்றனர்.

இந்த நடைமுறை வெறும் வருகைப் பதிவு மட்டுமல்லாமல், சிறுவர்களிடம் தன்னம்பிக்கை, பொறுப்புணர்வு, சுயநிர்வாகம் மற்றும் கணக்குப்படுத்தும் மனப்பான்மை போன்ற வாழ்க்கைத் திறன்களை ஆரம்பக் கட்டத்திலேயே வளர்க்கும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.

இந்த வகுப்பறை செயல்பாட்டை கல்வியாளர் சுமி சியாக் சமூக வலைதளத்தில் “My little ones, taking charge” என்ற வாசகத்துடன் பகிர்ந்திருந்தார். குறுகிய நேரத்தில் வைரலான அந்த வீடியோவை சுமார் 2.7 கோடி பேர் பார்வையிட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் விருப்பம் தெரிவித்து, ஆசிரியையின் படைப்பாற்றலை பாராட்டியுள்ளனர்.

“தொடக்கப்பள்ளி மாணவர்களின் வருகையை அதிகரிப்பதற்கும், அவர்களிடம் சுய பொறுப்புணர்வை உருவாக்குவதற்கும் இது மிகச் சிறந்த முயற்சி. இந்த யோசனையை உருவாக்கியவருக்கு பாராட்டுகள்,” என்று ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

“குழந்தைகளின் ஆர்வத்தையும் தன்னம்பிக்கையையும் வளர்க்கும் கற்றல் முறைக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. புத்தகப் பாடத்தைத் தாண்டி அனுபவத்தின் மூலம் கற்றலை ஊக்குவிக்கும் இந்த முயற்சி பாராட்டுக்குரியது,” என மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையில், “இனி நண்பருக்குப் பதிலாக வருகை பதிவு செய்வது இன்னும் எளிதாகிவிட்டதே!” என்று ஒருவர் நகைச்சுவையாகக் கருத்து தெரிவித்திருந்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *