“அவங்க குழந்தையை விட்டுட்டு போகும் போது அவளுக்கு ஒரு வயசு. கொரோனா நேரம். தையல் தொழில் எல்லாம் முடங்கிருச்சு. பாப்பாவுக்கு டயப்பர் வாங்கவும், பால் வாங்கவும் தினமும் நூறு ரூபாய் வேணும். எனக்கும் சப்போர்ட் பண்ண யாரும் இல்ல. நல்லா இருக்கும் குழந்தைகளையே அக்கம் – பக்கத்துல பார்த்துக்க யோசிப்பாங்க. சிறப்புக் குழந்தைங்கிற பட்சத்துல உதவி கேட்கவே தயக்கமா இருக்கும். என்னால வேலைக்கும் போக முடியல. சம்பாத்தியமும் இல்ல. குழந்தையை சமாளிக்கவும் சிரமமா இருந்துச்சு. உண்மையைச் சொல்லணுமா கைக்குழந்தையை வெச்சுக்கிட்டு நான் படாத கஷ்டம் இல்ல.”
அந்த நாட்களை நினைவுகூரும் போது, அகமது சில நொடிகள் பேசாமல் அமைதியாக இருந்தார்.

“வேற வழியே இல்லாம குழந்தையை தூங்க வெச்சுட்டு, வீட்டை பூட்டிட்டு அதிகாலை மூணு மணிக்கு பால் பாக்கெட் போடுற வேலைக்குப் போவேன். படபடப்பாகவே இருக்கும். ஏழு மணிக்கு அவ எழுந்திரிப்பா. அதுக்குள்ள அடிச்சு புடிச்சு வீட்டுக்கு ஓடி வருவேன். ஒரு நாள் சைக்கிள் பஞ்சர் ஆகி, நான் வீட்டுக்கு வர லேட் ஆகிருச்சு. குழந்தை தூங்கி எந்திரிச்சு, அழுது, ஆர்பாட்டம் பண்ணிட்டா. அதைப் பார்த்து அக்கம் – பக்கத்துல இருந்தவங்க எல்லாம் ஒரு மாதிரி பேசிட்டாங்க. அதனால அந்த வேலையை விட்டுட்டு வீட்ல இருந்தே தைக்க ஆரம்பிச்சேன்” என்ற அகமதுவின் கண்கள் ஒரு இடத்தில் நிலைகுத்தி நின்றது. நீண்ட பெருமூச்சுக்குப் பிறகு மீண்டும் தொடர்ந்தார்.