சென்னை ஐஐடி-யில் எலக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் படித்தவர், இன்று உலக செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியில் மிக முக்கியக் குரலாகவும் கவனம் ஈர்க்கும் விஞ்ஞானிகளில் ஒருவராகவும் வலம் வருகிறார். கால்டெக் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், அறிவியல் ஆராய்ச்சியில் AI பயன்பாட்டை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் ஆய்வாளராகவும் செயல்பட்டு வரும் அனிமா ஆனந்த்குமார், பிரபல “டைம்’ (TIME) வெளியிட்டுள்ள 2026-ம் ஆண்டுக்கான ‘TIME100 AI’ பட்டியலில் பெருமையுடன் இடம்பெற்றுள்ளார்.
யார் இந்த அனிமா ஆனந்த்குமார்?
கர்நாடகாவின் மைசூரைச் சேர்ந்த அனிமா ஆனந்த்குமார், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT Madras) எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படித்தவர். 2004-ல் தனது பட்டப்படிப்பை முடித்த அவர், பின்னர் அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தின் (Cornell University) உயர் கல்வியைத் தொடர்ந்தார். அங்கு முனைவர் பட்டம் பெற்ற பிறகு எம்.ஐ.டி-யில் (MIT) ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினார்.
தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தில் (Caltech) கம்ப்யூட்டிங் அண்ட் மேத்தமேட்டிக்கல் சயின்சஸ் துறையின் பிரென் பேராசிரியராகச் செயல்பட்டு வருகிறார். இதற்கு முன்பு ‘அமேசான் வெப் சர்வீசஸ்’ (AWS) மற்றும் ‘என்விடியா’ (NVIDIA) போன்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களிலும் AI ஆராய்ச்சியில் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.
அறிவியலுக்காக AI!
இன்று AI பெரும்பாலும் சாட்பாட்கள் (Chatbots), இமேஜ் ஜெனரேஷன் (Image Genration )போன்ற பொதுவான பயன்பாடுகளுடன் மக்களிடம் அறிமுகமாகியுள்ளது. ஆனால், அனிமா ஆனந்த்குமாரின் ஆராய்ச்சி இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இயற்பியல் மற்றும் அறிவியல் சார்ந்த சிக்கல்களைத் தீர்க்க AI எப்படிப் பயன்படுத்தப்படலாம் என்பதில்தான் அவரது முக்கியக் கவனம் உள்ளது.
குறிப்பாக, ‘நியூரல் ஆபரேட்டர்கள்’ (Neural Operators) மற்றும் ‘ஃபோரியர் நியூரல் ஆபரேட்டர்கள்’ தொடர்பான அவரது ஆய்வுகள், சிக்கலான அறிவியல் கணக்கீடுகளை மின்னல் வேகத்தில் செய்யும் புதிய வழிகளை உருவாக்கியுள்ளன. பாரம்பரிய கணினி முறைகளில் அதிக நேரம் எடுக்கும் வானிலை, திரவ இயக்கம் மற்றும் பிற இயற்பியல் சிமுலேஷன்களை AI உதவியுடன் வேகமாக கணிக்க முடியுமா என்பதற்கான ஆராய்ச்சிகளில் அவர் முக்கியப் பங்காற்றியுள்ளார்.