தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றிருக்கிறது.
118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில்தான் திமுக கூட்டணியில் இருந்து விலகி 5 இடங்களை வென்ற காங்கிரஸ் ஆதரவு அளித்திருக்கிறது.
இன்னும் ஆறு இடங்கள் தேவை என்பதால் த.வெ.க சிக்கலில் உள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் த.வெ.க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதனிடையே த.வெ.க தலைவர் விஜய் நேற்று (மே. 6) ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியிருந்தார்.

பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கையோடு வாருங்கள் என ஆளுநர் அனுப்பி வைத்த நிலையில், இன்று நடைபெற இருந்த த.வெ.க தலைவர் விஜய்யின் பதவியேற்பு விழா ரத்தானது.
இந்நிலையில் நடிகர் விஷால் தன் எக்ஸ் பக்கத்தில், “2017/18-ம் ஆண்டுகளில் கோவா, மணிப்பூர், மேகாலயா மற்றும் மிக முக்கியமாக கர்நாடகாவில் நடந்த அதே சூழலைத்தான் இங்கும் பார்க்கிறோம். அங்கு முதலில் அரசாங்கம் அமைக்கப்பட்டு, அதன் பின்னரே சட்டமன்றத்தில் `பெருமதிப்பை நிரூபிக்க’ (Floor Test) வாய்ப்பு வழங்கப்பட்டது.
அதே முறையில், தமிழக ஆளுநர் ஏன் தளபதி விஜய் அவர்களுக்கு அரசு அமைக்க வாய்ப்பளிக்கத் தயங்குகிறார்? மக்களின் தீர்ப்பிற்கு அளிக்கப்படும் மரியாதை இதுதானா? தமிழக வெற்றிக் கழகம் கிட்டத்தட்ட பெரும்பான்மை இடங்களைப் பிடித்து இவ்வளவு பெரிய மக்கள் ஆணையைப் பெற்ற பிறகு, நமக்குத் தேவை ஒரு அரசாங்கமே தவிர, ஆளுநர் ஆட்சி அல்ல. நாம் பதவியேற்க வேண்டிய 233 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளோம்.
இந்த அடிப்படை உரிமைகள் அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல, தமிழகத்தின் மிக வலிமையான சக்தியான மக்களுக்கும் நன்றாகவே தெரியும்.
அன்பு விஜய் அவர்களே, நீங்கள் தான் ஆட்சி அமைப்பீர்கள்/அமைக்க வேண்டும். ஒரு வாக்காளராக நான் அதை முழுமையாக நம்பி எதிர்பார்க்கிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.