கும்பகோணம், ஆடுதுறை கிருஷ்ணன் கோவில் தோப்பு தெரு பகுதியைச் சேர்ந்தவர் கோடீஸ்வரன்(63). பாத்திரக்கடை நடத்தி வருகிறார்.
நேற்று இரவு பாத்திர கடையை மூடிவிட்டு கோடீஸ்வரன், அவரது மகன் பாலசுப்பிரமணியன்(38), கோடீஸ்வரனின் தம்பி மகன் பிரபாகரன்(32) ஆகியோர் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
அப்போது, சந்திரகாசன் என்பவர் தலைமையில் வந்த ஒரு கும்பல் மூன்று பேரையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். கடையில் வியாபாரமான பணத்தை கோடீஸ்வரன் பையில் வைத்திருந்தார்.
இவர்களைத் தாக்கிய கும்பல் கோடீஸ்வரனிடமிருந்த ரூ.68,700 பறித்து கொண்டதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், தாக்குதலில் காயமடைந்த கோடீஸ்வரன், பிரபாகரன், பாலசுப்பிரமணியம் ஆகிய மூவரும் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக கோடீஸ்வரன் அளித்த புகாரின் பேரில், திருவிடைமருதுார் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.