சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுகவை முறியடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது தவெக. விஜய் எம்.ஜி.ஆர் பாணியில், ‘நீதி வேண்டும்’ என மக்கள் மத்தியில் பிரசாரம் செய்தது வெகுவாக எடுபட்டிருப்பதை பார்க்க முடிகிறது.

1977 இல் எம்.ஜி.ஆர் தலைமையில் அதிமுக முதல் முறையாக ஆட்சியைப் பிடித்தது. அப்போது அதிமுக ஜனதா கட்சியுடன் கூட்டணியில் இருந்தது. 1980 இல் மத்தியில் ஜனதா ஆட்சி கவிழ்ந்த பிறகு மீண்டும் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கிறது. அந்தத் தேர்தலிலும் அதிமுக ஜனதா கட்சியோடு கூட்டணி அமைத்திருந்தது. திமுக காங்கிரஸோடு கூட்டணி அமைத்திருந்தது. இந்த கூட்டணி பெரிய வெற்றி பெறுகிறது. மத்தியிலும் காங்கிரஸ் ஆட்சி அமைகிறது. இந்திரா காந்தி பிரதமரானார். உடனடியாக எம்.ஜி.ஆர் அரசு மக்கள் செல்வாக்கை இழந்து விட்டதாகக் கூறி ஆட்சியைக் கலைத்தார்.
1980இல் மீண்டும் சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. அந்தத் தேர்தலில், ‘மக்களே நான் என்ன பாவம் செய்தேன். எதற்காக என்னுடைய ஆட்சியை கலைத்தார்கள். எனக்கு நீதி வேண்டும்’ என மக்களிடம் நீதி கேட்டு எம்.ஜி.ஆர் பிரசாரம் செய்தார். மக்கள் அந்தத் தேர்தலில் எம்.ஜி.ஆருக்கும் அதிமுகவுக்கு பெரிய வெற்றியைக் கொடுத்தனர்.
எம்.ஜி.ஆரின் அதே நீதி கேட்கும் பாணியைத்தான் விஜய்யும் பின்பற்றினார். கரூர் சம்பவத்துக்குப் பிறகு மீண்டும் பிரசாரத்துக்கு வந்த போது எல்லா கூட்டத்திலும் ஒரு வசனத்தை பேசத் தொடங்கினார்.

‘மக்களே உங்களுக்காக நீதி கேட்க வந்த நான், இப்போது எனக்காக உங்களிடம் நீதி கேட்கிறேன். இவர்களின் ஊழலையும் குடும்ப அரசியலையும் கேள்வி கேட்டதை தவிர நான் என்ன தவறு செய்தேன்?’ என மக்களிடம் நீதி கேட்டார். சேலம் தொடங்கி YMCA வில் கடைசியாக பேசிய கூட்டம் வரைக்கும் இதைத் தவறாமல் விஜய் பேசியிருந்தார். விஜய்யை எல்லாரும் சேர்ந்து எதிர்க்கிறார்கள் எனும் அனுதாபம் மக்கள் மத்தியில் எடுபட்டிருப்பதை தேர்தல் முடிவுகள் மூலம் அறிய முடிகிறது. தேர்தலில் எம்.ஜி.ஆர் பாணி ஒரு வெற்றிகரமான பார்முலா. அதை விஜய் செய்து மீண்டும் சாதித்துக் காட்டியிருக்கிறார்.