UPSC/TNPSC குரூப் – 1, 2 தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடன், King Makers IAS அகாடமி இணைந்து “நீங்களும் ஆகலாம் IAS’ என்ற தலைப்பில் இலவச பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறது. அதன்படி தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பாரத் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் இன்று ‘நீங்களும் ஆகலாம் IAS’ பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் திருமதி பா.பிரியங்கா பங்கஜம் இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு E.சுந்தரவதனம் இ.கா.ப., கிங்க் மேக்கர்ஸ் IAS அகாடமியின் இயக்குநர் சத்யஸ்ரீ பூமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

அத்துடன் அரசுப்பணி கனவையும் ஆட்சியர் பணி கனவையும் நனவாக்க துடிக்கும் மாணவர்கள், மாணவிகள் வேலைக்கு செல்லும் இளைஞர்கள், வேலை தேடும் இளைஞர்கள், பெண்கள் என சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்துக்கொண்டனர்.
இதில் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் பேசியதாவது, “UPSC தேர்வில் தேர்ச்சியுறுவது மட்டுமே ஒரு ஆட்சியாளருக்கான தகுதி கிடையாது. அது ஒரு தேர்வு மட்டுமே. உண்மையாவே ஆட்சியருக்கான சிறந்த அடிப்படை பண்பு என்பது மற்றவர்கள் படும் கஷ்டத்தை கண்டு தன்னையும் அவர்களுள் ஒருவராக நினைத்து, அவர்களுக்காக வருந்துவது கருணை காட்டுவது போன்றவை தான்.